களத்தில் குதித்த கிரண் பேடி.. 2 பலாத்கார போலீஸ் அதிரடி சஸ்பெண்ட்.. அதிர்ந்த புதுவை!
புதுச்சேரி: புதுச்சேரியில் காதலன் கண் முன்னே காதலியை இரவு ரோந்து சென்ற போலீசார் இரண்டு பேர் சேர்ந்து கற்பழித்த சம்பவத்தை தொடர்ந்து, துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் அதிரடி நடவடிக்கையால், போலீசார் 2 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியை சுற்றி பார்ப்பதற்காக கடந்த புதன்கிழமை கடலூரைச் சேர்ந்த இரண்டு காதல் ஜோடிகள் புதுச்சேரி வந்தனர். அவர்கள் புதுச்சேரியில் பல்வேறு இடங்களை சுற்றி பார்ப்பதுவிட்டு, அன்றிரவு அம்பலத்தடையார் வீதியில் உள்ள தங்கும் விடுதியில் அரை எடுத்து தங்கினர்.
அப்போது அந்த பகுதியில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பெரியகடை காவல்நிலைய போலீசார் சதீஷ்குமார் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் காதல் ஜோடிகள் தங்கியிருக்கும் தங்கும் விடுதிக்கு சென்று சோதனை என்ற பெயரில், நீங்கள் தனிமையில் இருப்பதை வெளியே சொல்லிவிடுவோம், வழக்குபதிவு செய்திவிடுவோம் எனக்கூறி காதல் ஜோடிகளை மிரட்டி, அதில் ஒரு ஜோடியிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்து சென்றதாக புகார் எழுந்தது.
போலீஸார் அத்துமீறல்
மேலும் மற்றொரு காதல் ஜோடியிடம் பணம் இல்லாததால் காதலன் கண் முன்னே காதலியை இரண்டு போலீசாரும் சேர்ந்து கற்பழித்தாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் மனதளவிலும், உடல் அளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் தங்களுக்குத்தான் அவமானம் என கருதிய காதலர்கள் இந்த விஷயத்தை வெளியே கூறாமல் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுவிட்டனர்.
சஸ்பெண்ட்
ஆனால் இச்சம்பவம் எப்படியோ வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. இச்சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நடந்த சம்பவம் உண்மை என தெரியவந்ததையடுத்து காதல் ஜோடிகளிடம் பணம் பறித்து, அத்துமீறல்களில் ஈடுபட்ட காவலர் சதீஷ்குமார், ரிசர்வ் பட்டாலின் காவலர் சுரேஷ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கிரண் பேடி வருகை
இதனிடையே இந்த விவகாரம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் காதுகளுக்கு செல்ல, அவரே இந்த விசாரணையில் நேரடியாக களம் இறங்கினார். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் பணிபுரிந்துவந்த பெரியகடை காவல்நிலையத்திற்கு நேரடியாக சென்ற கிரண்பேடி, அங்கு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்த காவல்துறை உயர் அதிகாரிகளிடம், பெரியகடை காவல்நிலையம் தொடர்பாக எனக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளன.
சரமாரி கேள்வி
இதில் என்ன நடந்தது? என்பதை தெரிந்துகொண்டுதான் வந்துள்ளேன். யாருடைய உத்தரவின்பேரில் போலீசார் தங்கும் விடுதிக்கு சோதனைக்கு சென்றனர்? சோதனையின்போது பெண் போலீசாரை ஏன் அழைத்து செல்லவில்லை. இதில் தவறு நடந்திருந்தால் அது நீதியல்ல. புகார்கள் வந்தால் அதை யார் கவனத்துக்கு கொண்டு செல்கிறார்கள்? பீட் ஆபிசர்களின் பணி என்ன? இந்த விவகாரத்தில் தவறு நடந்திருந்தால் அதிகாரிகளாக இருந்தாலும் அவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று கடுமையாக சாடினார்.
வெலவெத்த போலீஸ்
கிரண்பேடியின் கேள்விகளால் அதிர்ந்துபோன காவல்துறை உயரதிகாரிகள், உடனடியாக சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கூட்டு சேருதல், மிரட்டி பணம் பறித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இரண்டு பேரையும் பணி நீக்கம் செய்துள்ளனர். காதல் ஜோடியை மிரட்டி பணம் பறித்ததுடன், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் காவலர்கள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது புதுச்சேரி காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.