கஷ்ட காலத்தில் குடும்பம் இருக்கிறது.. கடவுளிடம் பிரார்த்தியுங்கள்.. கிரண் பேடி உருக்கம்
புதுச்சேரி: ஒவ்வொரு சம்பவத்திலும் நம்பிக்கையும், உண்மையையும் மற்றவர்களிடத்தில் உருவாக்குவதே அவசியம். கடினமான காலத்தில் நாங்கள் இருப்பதால், எங்களுக்காக கடவுளிடம் பிரார்த்தியுங்கள் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை குற்றம்சாட்டி அவருடைய பேத்தி வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், நான் கிரண் பேடியின் ஒரே பேத்தி. அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இடையில் எவ்வளவோ பிரச்னைகள் வந்துள்ளன. அப்போதெல்லாம், நான் உங்கள் பிரச்னைகளுக்கு நடுவில் வரமாட்டேன் என்று சொன்னீர்களே பாட்டி. இப்போது மட்டும் ஏன் வருகிறீர்கள்?
என் தந்தையையும், அவருடைய நண்பர்களையும் காவல்துறையை வைத்து ஏன் சிரமப்படுத்துகிறீர்கள்? என்னை யாரும் கடத்தவும் இல்லை. கொடுமைப்படுத்தவும் இல்லை. நான் எனது தந்தையுடம் சந்தோஷமாக இருக்கிறேன். அவருடன் நான் சந்தோஷமாக இருப்பதை நீங்களே பாருங்கள் என்று அந்த வீடியோவில் கட்டிலில் அமர்ந்திருக்கும் தன் அப்பாவைக் குறிப்பிட்டு காட்டுகிறார். தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே இந்த வீடியோவை யூ டியூப்பில் இருந்து நீக்க கிரண்பேடி கடிதம் தந்துள்ளார். மேலும் தனது மகள் - மருமகன் இடையிலான பிரச்சனை நீதிமன்றத்தில் இருக்கும் சூழலில் பேத்தி வெளியிட்ட வீடியோ தொடர்பாகவும் கிரண்பேடி பதில் தந்திருந்தார்.
இந்நிலையில் கிரண்பேடி தற்போது வாட்ஸ்அப் மூலமாக தனது குடும்ப உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தற்போது இணைய தளத்தில் உலா வந்துகொண்டிருக்கிருக்கும் வீடியோவை பார்த்து நீங்கள் அதிர்ச்சியடைந்திருப்பீர்கள் என்று எனக்கு தெரியும். எனது மகளுக்கும் அவரது சிறு குடும்பத்துக்குமான பாதுகாப்பும் இதில் சம்பந்தப்பட்டுள்ளது. அதை பொதுதளத்தில் விவாதிக்க விரும்பவில்லை.
எனது சொந்த வாழ்வில் முக்கிய கட்டத்தை அனுபவிக்கிறேன். இது யாருக்கும் வரக்கூடாது. நான் எப்போதும் என் வாழ்வில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கு காரணமானவர்கள் அனைவரையும் மன்னித்தே பழக்கப்பட்டுள்ளேன். யாரையும் தவறாக பேசி கெட்ட கர்மாவை சம்பாதிக்காதீர்கள். ஒவ்வொரு சம்பவத்திலும் நம்பிக்கையும், உண்மையையும் மற்றவர்களிடத்தில் உருவாக்குவதே அவசியம். கடினமான காலத்தில் நாங்கள் இருப்பதால், எங்களுக்காக கடவுளிடம் பிரார்த்தியுங்கள் என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.