என்ன இது, டெட் பாடி வெளியே தொங்குது.. புதுச்சேரி அரசு மருத்துவனைகளின் அவல நிலை
புதுச்சேரி: புதுச்சேரி அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்வதற்கு கூட ஆம்புலன்ஸ் வாகனம் இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 8 பெரிய மருத்துவமனைகள், 4 சமுதாய நலவழி மையங்கள், 40 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. கடந்த காலங்களில் புதுச்சேரி அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைக்கு நிகராக உயரிய சிகிச்சை அளித்து வந்தன.
ஏழை மக்களுக்கு தரமான மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, புதுச்சேரி அரசும் ஆண்டுதோறும் பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு அதிக நிதியை ஒதுக்கி வந்தது. புதுச்சேரியில் தரமான மருத்துவ சிகிச்சை கிடைத்து வந்ததால், புதுச்சேரி மட்டுமின்றி, அண்டை மாநிலமான தமிழகத்தை சேர்ந்தவர்களும் புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.
ஆனால் தற்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. ஆளுநர் கிரண்பேடிக்கும் - முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே நீடித்து வரும் அதிகார சண்டையால், புதுச்சேரி மாநிலம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றது.
மத்திய அரசும் புதுச்சேரி அரசுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யாததால், மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் நிறைவேற்ற முடியாமல் ஆளும் காங்கிரஸ் அரசு திணறி வருகின்றனர். நிதிப் பற்றாக்குறையால் சுகாதாரத்துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு கொடுப்பதற்கு போதிய மருந்துகள் இருப்பு இல்லை. மருத்துமனைகளில் தங்கியிருக்கும் உள் நோயாளிகளுக்கு சரிவர உணவு வழங்கப்படுவதில்லை. ஆம்புலன்ஸிக்கு டீசல் போடுவதற்கு பணம் இல்லை. இவ்வாறு பல்வேறு பிரச்சினைகள் சுகாதாரத்துறையில் உள்ளன. அந்த வரிசையில் தற்போது இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்வதற்கு ஆம்புலன்ஸ் கூட இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியொரு சம்பவம்தான் கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது.
கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவமனையில், இறந்தவர் ஒருவரின் உடலை கொண்டு செல்வதற்காக மருத்துவமனை சார்பில் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஆம்புலன்ஸில் இறந்தவரின் உடலை சரியான முறையில் வைப்பதற்கு கூட இடமில்லை.
இறந்தவரின் கால்கள் வாகனத்தைவிட்டு வெளியே நீட்டிகொண்டிருக்கும் நிலையில், சிறிய வாகனம் அது. அதுமட்டுமல்லாமல் அந்த வாகனத்தில் லைட் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை. போதாதற்கு ஒரு உடலை எடுத்து செல்லக்கூட முடியாத அந்த ஆம்புலன்ஸில் இரண்டு உடல்களை எடுத்துச் செல்ல மருத்துவமனை ஊழியர்கள் கட்டாயப்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம்ச்சாட்டுகின்றனர்.
ஆளும் காங்கிரஸ் அரசு பொதுமக்களின் சுகாதாரம் சார்ந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல், அரசு மருத்துவமனைகளில் தேவைக்கேற்ப மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும், நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.