சிகிச்சைக்கு வந்த பெண் நோயாளியிடம் அத்துமீறல்.. புதுவை ஜிப்மரில் பரபரப்பு.. டாக்டர் மீது வழக்கு
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக டாக்டர் மீது புகார் கூறப்பட்டது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி கோரிமேடு பகுதியில் இயங்கி வரும் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனை தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவமனையாக கருதப்படுகிறது. இங்கு உலகதரத்தில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் புதுச்சேரி மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள் இங்குவந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி அருகே கண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க இளம்பெண் வயிற்றுவலி காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர், அவருக்கு குடல் இறக்க பாதிப்பு இருப்பதாகவும், ஒரு மாதம் கழித்து மீண்டும் சிகிச்சைக்கு வருமாறும் கூறியுள்ளார்.
அதன்படி, நேற்று ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்ற அப்பெண்ணை, பரிசோதித்த மருத்துவர், மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டுமென்றும், அதற்காக ஒரு டெஸ்ட் எடுக்க வேண்டுமென கூறி, பரிசோதனைக் கூடத்தில் அப்பெண்ணிடம் மருத்துவர் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அதிர்ச்சியடைந்த அப்பெண் சத்தம்போட்டு, மருத்துவரை தள்ளிவிட்டு வெளியே ஓடிவந்து, நிலைமையை உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக சம்பந்தபட்ட அந்த மருத்துவரும் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார்.
இதனையடுத்து அப்பெண்ணின் உறவினர்கள் இச்சம்பவம் குறித்து தன்வந்திரி நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிகிச்சை வந்த இளம்பெண்ணிடம் மருத்துவர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ள சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.