புதுச்சேரிக்கு "அது"க்கு போறீங்களா.. விலை உயர்ந்து போச்சு மக்களே.. எக்ஸ்ட்ரா காசோடு கிளம்புங்க!
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரியில் மது பான விலை உயர்ந்துள்ளது சுற்றுலாப் பயணிகளையும் உள்ளூர் குடிமகன்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
புதுச்சேரி என்றாலே நம்மில் பலருக்கு நினைவுக்கு வருவது மதுபானம். புதுச்சேரி மாநிலத்தில் கிடைக்கும் விதவிதமான மது வகைகளை ருசித்து பார்ப்பதற்காகவே பலர் வார இறுதி நாட்களில் அலை மோதுவர்.
கர்நாடகம், தமிழகம், ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஆயிரகணக்கானோர் நாள்தோறும் புதுச்சேரிக்கு வந்து செல்கின்றனர்.
குட்டி கோவா
புதுச்சேரி பிரெஞ்சு கலாச்சாரத்தை சார்ந்துள்ளதால் மதுவையும், புதுச்சேரியையும் ஒருபோதும் பிரித்து பார்க்க முடியாது. புதுச்சேரியை குட்டி கோவா என்றும் அழைக்கின்றனர். புதுச்சேரியில் 400 க்கும் மேற்பட்ட மதுபானகடைகள், 96 சாராயக்கடைகள், 75 கள்ளுகடைகள் உள்ளன.
சரக்குக்கா பஞ்சம்
புதுச்சேரியில் ஸ்காட்ச், ரம், பிராந்தி, விஸ்கி, ஒயின், பீர், பிரிசர், ஓட்கா என மொத்தம் 1300 க்கும் மேற்பட்ட மதுவகைகள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது மதுபானங்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 2017 க்கு பிறகு புதுச்சேரி அரசு கலால்துறை திடீரென்று கலால்வரியை தற்போது உயர்த்தியுள்ளது.
விலை உயர்வு
இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபாட்டில்கள் (விஸ்கி, பிராந்தி, ரம்) விலை குறைவானது, சாதாரணமானது, நடுத்தரமானது, விலை உயர்ந்தது என நான்கு பிரிவுகளில் இருக்கும். இதில் விலை குறைவானது, சாதாரணமான வகைக்குட்ட மதுபானம் ஒரு கேஸுக்கு ரூ. 75ல் இருந்து ரூ. 93 ஆக வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதேல் போல் நடுத்தரமான, விலை உயர்ந்த பிரிவு மதுபானங்கள் இரண்டையும் ஒருங்கிணைத்து ஒரு கேஸிற்கு ரூ. 100ல் இருந்து ரூ. 110 ஆக வரி உயர்த்தப்பட்டுள்ளது.
குடிகாரர்கள் அதிர்ச்சி
கலால்வரி உயர்வு காரணமாக குறைந்த மற்றும் சாதாரண விலை மதுபாட்டில் குவார்ட்டர் ரூ.5-ம், முழு பாட்டில் ரூ. 15 வரை விலை உயர வாய்ப்பு உள்ளது. உயர்ந்த விலை முழு மதுபாட்டில் ரூ. 20 வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த விலை உயர்வின் காரணமாக மாதம் ரூ. 2 கோடி வரி வருவாய் புதுச்சேரி அரசுக்கு அதிகரிக்கும்.
திடீரென மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், மதுவை நாடி புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் குடிமகன்களும் தற்போது கவலையடைந்துள்ளனர்.