புதுச்சேரியில் முதல் நாள் 3 கோடியே 83 லட்சத்திற்கு மது விற்பனை..அடுத்தடுத்த நாட்களில் விற்பனை மந்தம்
புதுச்சேரி: புதுச்சேரியில் நீண்ட இழுபறிக்கு பிறகு மதுபானக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், முதல் நாள் 3 கோடியே 85 லட்சத்திற்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கலால் துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 24 ந்தேதி அமலானது. தொடர்ந்து அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வருகிற 31ந்தேதி வரை அமலில் உள்ளது. இந்நிலையில் பல தளர்வுகளுக்கு அடுத்து நீண்ட இழுபறிக்கு பிறகு புதுச்சேரியில் மதுவிற்பனை நேற்று முன்தினம் தொடங்கியது.
ஊரடங்கு விதிக்கப்பட்டு ஏறக்குறைய 60 நாட்களுக்கு பின்னர் மது விற்பனை தொடங்கிய நிலையில், மது வாங்க வருவோர் எண்ணிக்கையும் அதிகளவில் இருந்தது. உரிமம் ரத்து உள்ளிட்ட காரணங்களால் மொத்தமுள்ள 475 கடைகளில் புதுச்சேரி காரைக்காலில் மட்டும் 250 க்கும் குறைவான கடைகள் திறக்கப்பட்டது. நீண்ட நாட்கள் கழித்து கடைகள் திறந்ததால் மீண்டும் கடையை மூடி விடப்போகிறார்கள் என்ற அச்சம் காரணமாக முதல் நாளில் மதுப்பிரியர்கள் மது வாங்க ஆர்வம் காட்டினர். காலை 10 மணி முதல் இரவு 7 மணிவரை மது விற்பனை இருந்தது.
இந்நிலையில் முதல் நாள் மது விற்பனை வசூல் தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள கலால்துறை அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி மாநிலத்தில் மதுக்கடைகளின் திறப்பின் முதல்நாள் வசூல் ரூபாய் - 3 கோடியே 83 லட்சம் என்றும், அதில் புதுச்சேரியில் 3 கோடியே 23லட்சத்து 73 ஆயிரம் மற்றும் காரைக்காலில் - 59 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் என தெரிவித்தார்.
முதல்வர் பொது நிவாரண நிதி... வெளிப்படை தன்மை கோரி வழக்கு.. அரசுக்கு நோட்டீஸ்
இதனிடையே நேற்று மற்றும் இன்று மது பிரியர்கள் வராததால் பெரும்பாலான மதுக்கடைகள் வெறிச்சோடின. சொற்ப எண்ணிக்கையிலேயே மது பிரியர்கள் மது வகைகளை வாங்கிச் செல்கின்றனர். வழக்கத்தை விட மூன்று மடங்கு வரை மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், மது பிரியர்களின் கூட்டம் எதிர்பார்த்த அளவுக்கு வராததால் மது விற்பனை மந்தமாக இருந்து வருகிறது.
இதுகுறித்து மதுக்கடை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், வார வேலை நாட்களில் எனது கடையில் மட்டும் ரூபாய் 2 லட்சம் வரை தினமும் மதுபானம் விற்பனை யாகும். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சராசரியாக ரூ.3 லட்சத்திற்கு விற்பனை நடக்கும். மதுக்கடை திறக்கப்பட்ட முதல் நாள் என்பதால் நேற்று முன்தினம் எனது கடையில் ரூ.4 லட்சத்திற்கு மதுபானம் விற்பனையானது.
ஆனால் நேற்று ஒரு லட்சத்திற்கு கூட மதுபானம் விற்பனை ஆகவில்லை. மதுபானங்களின் கடுமையான விலை உயர்வே இதற்கு காரணம். விலையை குறைப்பதன் மூலமே மது விற்பனை பழைய நிலைக்கு திரும்பும். தற்போதைய நிலை நீடித்தால் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படும் என்றார்.