புதுவையில் நாளை முதல் மதுபானக் கடைகள் ஓபன்.. சரக்கு விலையை கேட்டாலே கிர்... கிர்ர்தான்
புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை முதல் மதுபானக் கடைகளை திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்திற்கு இணையாக மதுபானங்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
Recommended Video
மலிவான விலையில் சரக்கு கிடைக்கும் என்ற 'மங்கா புகழை' பறிகொடுத்த புதுச்சேரி-ரேட் ரொம்ப காஸ்ட்லி மேன்!
புதுச்சேரியில் நீண்ட இழுபறிக்கு பிறகு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மதுக்கடைகளை திறப்பதற்கு நேற்று அனுமதி அளித்தார். இதனை தொடர்ந்து மதுபானங்களின் விலை, வரி உயர்வு தொடர்பாக அரசாணை இன்று வெளியானது. அதில் தமிழகத்திற்கு இணையாக மதுபானங்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டிருந்தது. மேலும் புதுச்சேரியில் மட்டுமே விற்பனையாகும் மதுவுக்கு 25 சதவீதமும், சாராயத்துக்கு 20 சதவீதமும் கொரோனா வரி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கள்ளுக்கு கொரோனா வரி விதிக்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து மதுபானம் மற்றும் சாராயக்கடைகள் திறப்பது தொடர்பாக கலால்துறை அமைச்சர் நமச்சிவாயம், மதுபானக்கடை உரிமையாளர்களுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை முதல் மதுபானக்கடைகள் திறக்கப்படுகிறது. மதுக்கடைகள், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் காலை 10 முதல் இரவு 7 வரை திறந்திருக்கும். மதுக்கடைகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்தால் மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்படும். சமூக இடைவெளி கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
தமிழகத்திலிருந்து கொரோனா தொற்றாளர்கள் வந்து விடக்கூடாது என்பதற்காக கட்டுப்பாடுகள் விதித்துள்ளோம். அதன்படி கொரோனா வரி விதிக்கப்பட்டு தமிழகத்துக்கு இணையான மது விலை இருக்கும். மதுபானங்கள் மீதான கொரோனா வரி 3 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்று குறிப்பிட்டார். மேலும் கலால்துறை விதியின்படி நபர் ஒருவர் 4 அரை லிட்டர் வரை மதுபானங்களை வாங்கிச்செல்லலாம் என தெரவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் தமிழகத்துக்கு இணையாக மதுபானங்கள் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால் குடிகாரர்கள் கவலையடைந்துள்ளனர்.