இது என்னடா புதுச்சேரிக்கு வந்த சோதனை- சரக்கு கடை திறந்தும் வாங்க வராத குடிமகன்கள்
புதுச்சேரி: புதுச்சேரியில் இரண்டு மாதங்களுக்கு பிறகு மதுபானக்கடைகள் இன்று திறக்கப்பட்டன. தமிழகத்திற்கு இணையாக மூன்று மடங்கு வரை மதுபானங்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால் மதுபானங்களை வாங்க குடிமகன்கள் ஆர்வம் காட்டவில்லை.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 4 வது கட்டமாக வரும் 31 ஆம் தேதி வரை புதுச்சேரியில் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக புதுச்சேரியில் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனிடையே மூன்றாம் கட்ட ஊரடங்கில் மத்திய அரசு சில தளர்வுகளை அளித்ததை தொடர்ந்து புதுச்சேரியில் நீண்ட இழுபறிக்கு பிறகு இன்று முதல் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
மதுக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். இரண்டு மாதங்களுக்கு பிறகு மதுபானக் கடைகள் திறக்கப்பட்டாலும், மதுபானங்களின் விலை தமிழகத்திற்கு இணையாக மூன்று மடங்கு வரை விலை உயர்த்தப்பட்டுள்ளதால் மதுபானங்களை வாங்க குடிமகன்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.
விற்பனை நேரத்தை அதிகரித்தும் நோ யூஸ்.. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை சரசரவென சரிவு
இதனால் மதுக்கடைகளில் குடிமகன்களின் கூட்டம் குறைந்தே காணப்பட்டது. அதேபோல் குடிமகன்களின் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து மதுபானங்களை வாங்கிச்சென்றனர்.
ஒவ்வொரு மதுக்கடை முன்பும் திருத்தப்பட்ட விலை பட்டியலும் ஒட்டப்பட்டிருந்தது. இதனிடையே ஊரடங்கின் போது கள்ளத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்த 102 மதுபான கடைகளை திறக்க இன்று அனுமதிக்கப்படவில்லை.