தமிழகத்தைத் தொடர்ந்து.. புதுச்சேரியில் நாளை முதல் மதுக் கடைகள் ஓபன்.. குடிகாரர்கள் செம குஷி!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் நாளை முதல் மதுபானக் கடைகளை திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் சமூக இடைவெளியை பின்பற்றி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க வேண்டுமெனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மதுவுக்கு பெயர்பெற்ற புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கலால்துறை மூலம் ஆண்டொன்றுக்கு புதுவை அரசுக்கு சுமார் ரூ.1000 கோடி வருமானம் கிடைக்கிறது. மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த 4 ந் தேதி ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்ததால் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, டெல்லி, தமிழ்நாடு, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியைச் சேர்ந்த குடிகாரர்கள் அண்டை மாநிலமான தமிழகத்தின் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கு சென்று மது அருந்துவதும், மதுவை புதுச்சேரிக்கு கடத்தி வருவதுமாக இருந்தனர்.
இதனால் புதுச்சேரி அரசுக்கு வருவாய் இழப்பு மட்டுமின்றி, குடிகாரர்களால் புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டது.
எனவே குடிகாரர்கள் அண்டைமாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்க புதுவையில் மதுபான கடைகளை திறக்க அரசு முடிவு செய்தது. இந்நிலையில் புதுச்சேரியில் மதுபானக் கடைகளை திறப்பது குறித்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
என் மகன் செத்துட்டானே.. முகத்தைகூட பார்க்க முடியாம போச்சே.. இதான் எங்க கதியா? இதயத்தை கிழித்த போட்டோ
இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான் மற்றும் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அமைச்சரவை கூட்டத்தில் நாளை முதல் புதுச்சேரி மாநிலத்தில் மதுக்கடைகளை திறப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே மதுக்கடைகளை திறந்திருக்க வேண்டும்.
கைகளை சுத்தம் செய்யும் தானியங்கி கிருமி நாசினி இயந்திரம்.. புதுச்சேரி இளைஞர்கள் அசத்தல்
மது வாங்க வருபவர்கள், சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசங்களை அணிந்து வர வேண்டும். மதுக்கடையில் கிருமிநாசினி உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. மேலும் மதுபான விற்பனையுடன் கூடிய ரெஸ்ட்டாரெண்டுகளுக்கு அனுமதி இல்லை என்றும், ஊரடங்கு காலத்தில் கள்ளத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்தது தொடர்பாக தற்காலிக உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ள 100 மதுபானக்கடைகளும் மது விற்பனை செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நாளை முதல் மதுபானக் கடைகள் திறக்கப்பட உள்ளதால் குடிகாரர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.