பொங்கல் வந்தாச்சா.. குவார்ட்டர் கடத்தல் இனிதே ஆரம்பம்.. 2400 பாட்டில் சிக்கின.. புதுவையில்!
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியிலிருந்து தமிழக பகுதிக்கு மதுபாட்டில்களை கடத்திச் சென்ற வேனை போலீசார் துரத்திச் சென்று பிடித்தனர். வேனில் இருந்து ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள 2,400 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தை விட புதுச்சேரியில் மதுபானங்களின் விலை மிகவும் குறைவு என்பதால், புதுச்சேரியிலிருந்து தமிழகத்திற்கு அதிகளவில் மதுபானங்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசுக்கு ஆண்டுக்கு பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
தமிழக அரசு மது கடத்தலை தடுக்க புதுச்சேரி - தமிழக எல்லைப்பகுதிகளான, புத்துப்பட்டு, கெங்கராம்பாளையம், சிறுவந்தாடு, சாவடி, ஆரோவில், கிளியனூர் ஆகிய இடங்களில் மதுவிலக்கு சோதனைச்சாவடிகளை அமைத்து மதுபானங்களை கடத்துபவர்களை கைது செய்து வருகிறது. இருந்தபோதிலும் மது கடத்தல் ஓய்ந்தபாடில்லை.
இதனிடையே பொங்கல் பண்டிகையொட்டி புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு மதுபாட்டில்கள் கடத்துவதை தடுக்க, விழுப்புரம் மாவட்டத்தில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாநில எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மனதில் தோன்றியதை சொன்னேன்.. திமுகவுடன் எந்த மனக்கசப்பும் இல்லை.. கே.எஸ் அழகிரி விளக்கம்!
இந்நிலையில் கோட்டக்குப்பம் போலீசார் புதுச்சேரி - கிளியனூர் சாலையில் சாதாரண உடையில் நின்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியில் இருந்து பால் கொண்டு செல்வதுபோல் வந்த வேனை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த வேன் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த வேனை மடக்கி பிடிக்க ஜீப்பில் பின்னால் துரத்தி சென்றனர்.
போலீசார் பின் தொடர்ந்து வருவதை அறிந்ததும், வேனை ஓட்டி சென்ற டிரைவர் திடீரென வேனை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதைத் தொடர்ந்து வேனில் போலீசார் சோதனை நடத்தியபோது, அந்த வேனில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வேனில் மொத்தம் 50 பெட்டிகளில் 2400 குவாட்டர் பிராந்தி பாட்டில்களும், 50 லிட்டர் சாராயமும் இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூபாய் 2 லட்சமாகும்.
இதையடுத்து மதுபாட்டில் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேனை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை தேடி வருகின்றனர்.