57 நாட்களுக்கு பிறகு புதுச்சேரியில் பேருந்து சேவை தொடக்கம்.. பொதுமக்கள் ஹேப்பி!
புதுச்சேரி: புதுச்சேரியில் 57 நாட்களுக்கு பிறகு இன்று முதல் உள்ளூர் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்து பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர்.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி புதுச்சேரி மாநிலத்தில் 4 ம் கட்டமாக வரும் 31 ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 4 ஆம் கட்ட ஊரடங்கில் புதுச்சேரி அரசு பல்வேறு தளர்வுகளை வழங்கியுள்ளது. அதாவது மதுக்கடைகள் திறப்பு, மாநிலத்துக்குள்ளேயே உள்ளூர் பேருந்துகளை இயக்குவது, கார், ஆட்டோக்கள் இயக்கம். கடைகள், ஓட்டல்கள் இரவு 7 மணி வரை திறந்து வைக்கலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி முதல் கட்டமாக புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப் பகுதிகளான கோரிமேடு, நல்லவாடு, கொம்பாக்கம், வில்லியனூர், டி.என்.பாளையம் என 5 வழித்தடங்களில் மட்டும் உள்ளூர் பேருந்து சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
மேலும் பயணிகள் முக கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பேருந்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் பயணிகள் இருக்கையில் அமரும் போது சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும் என்ற கட்டுபாடும் விதிக்கபட்டுள்ளது. பேருந்துகள் புறப்படுவதற்கு முன்பும், பேருந்து வந்த பின்பும் கிருமிநாசினிகள் தெளிக்கப்படுகிறது.
இதேபோல் புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு பேருந்துகளை இயக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இருப்பினும் புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு செல்லும் வழியில் தமிழக பகுதியான கடலூர் மற்றும் நாகை மாவட்டத்தை கடந்து செல்ல வேண்டி இருப்பதால் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர், கடலூர் மற்றும் நாகை மாவட்ட ஆட்சியர்களிடம் புதுச்சேரி அரசு பேருந்து தமிழகத்தின் வழியாக செல்வதற்கு அனுமதி கேட்டு இருந்தார்.
இதனையடுத்து புதுச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் நாகை மாவட்ட வழியாக காரைக்காலுக்கு புதுச்சேரி பேருந்துகளை இயக்க இரு மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி அளித்துள்ளனர். மேலும் புதுச்சேரி அரசு பேருந்துகள் தமிழக பகுதிகளில் நிறுத்தி பயணிகளை ஏற்றாமல் நேரடியாக காரைக்காலுக்கு இயக்க வேண்டுமென நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளனர்.
இந்தியாவில் மிகப்பெரிய கொரோனா ஸ்பைக்.. 24 மணிநேரத்தில் 5611 பேருக்கு தொற்று.. ஷாக் தரும் தமிழகம்
இதனை தொடர்ந்து நாளை 21 ம் தேதி முதல் புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு இடைநில்லா பேருந்து சேவை காலை 6 மணிக்கு தொடங்குகிறது. அதேபோல் காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு மதியம் 12.30 மணிக்கு பேருந்து புறப்படும் என புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது