கோர்ட் தீர்ப்பு.. பராசக்தி டயலாக்கை போல் மக்களுக்கு உருக்கமாக கடிதம் எழுதிய கிரண்பேடி!
புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரி மக்களுக்கு உருக்கமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் துணைநிலை ஆளுநர் தலையிடக்கூடாது என்றும், கிரண்பேடிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்தும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு ஆளும் காங்கிரஸ் அரசுக்கு மகிழ்ச்சியையும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரி மக்களுக்கு இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், புதுச்சேரியில் பதவியேற்றது முதல் கடந்த 3 ஆண்டுகளாக நாள்தோறும் இதுபோன்ற பணிகளை செய்து வருகிறேன்.
கடற்கரை, தெருக்கள், கால்வாய்களை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டோம். இளையோர் சைக்கிள் பயணத்தை ஊக்குவித்தோம். மக்கள் குறைகளை ராஜ்நிவாஸில் கேட்டோம். மக்கள் பார்வையிட ராஜ்நிவாஸை திறந்து வைத்தோம்.
ஃபனி புயல் எதிரொலி.. புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை
மின்துறை, நகராட்சிகளில் நிலுவை தொகைகளை வசூலிக்க நடவடிக்கை எடுத்தேன். தனியார் மருத்துவக்கல்லூரிகளில் கட்டணம் கூடுதல் வசூல் தொடர்பாக ஏழை மாணவர்கள் போராடி வந்த சூழலில் அதில் நீதித்துறை தலையிடவும், அதில் தொடர்ந்து நிரந்தர முடிவு ஏற்படும் உதவினோம். நில மாஃபியாவிடமிருந்து தங்களின் உடமைகளை பாதுகாக்க உதவினேன்.
சாலை போக்குவரத்தில் ஹெல்மெட் பயன்படுத்த நடவடிக்கை எடுத்தேன். ஆனால், இதுவரை அதில் போதிய விழிப்புணர்வு இல்லை. பெருநிறுவனங்கள் சமூக நிதியுதவி திட்டத்தின் கீழ் வாய்க்கால்கள் தூர்வாரினோம். நீர்வளத்தை பெருக்கினோம். இரவு நேரத்திலும் கண்காணிப்பு அதிகரித்து மகளிர் பாதுகாப்பை உறுதி செய்தோம். அரசு நிர்வாகம் மேம்பட அதிகாரிகளுக்கு பயிற்சியை ஆளுநர் மாளிகை தரப்பில் தரப்பட்டது.
மக்களை நேரடியாக சந்தித்து பிரச்சினைகள், குறைகளுக்கு தீர்வு காணப்பட்டது. 24 மணி நேர கண்காணிப்பும் உறுதி செய்யப்பட்டது. பின்வாசல் வழியான பணி நியமனங்கள் நிறுத்தப்பட்டன. புதுச்சேரியை காக்க நிதி விவகாரத்தில் அனைத்து வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டன. புதுச்சேரி அனைவரும் விரும்பும் நகரம். இது முழு வளர்ச்சி பெற இவ்விஷயங்களை யார், எவ்வளவு செய்கிறார்கள் என்பது முக்கியமல்ல.
அனைத்து வேலைகளையும் இணைந்து மக்களுக்கு பணி செய்வது நல்ல நிர்வாகம். நிர்வாகத்தில் யார் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. நல்ல நிர்வாகத்தை யார் வழங்குகிறார்கள் என்பதுதான் முக்கியம். மக்களுக்கு சேவை செய்யவேண்டும். அவர்களை காக்க வைக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.