புதுச்சேரிக்கு வருகிறார் கமல்ஹாசன்.. 31ம் தேதி தேர்தல் அறிக்கை வெளியீடு.. தடபுடல் ஏற்பாடு
புதுவை: புதுச்சேரி மாநிலத்திற்கான தனி தேர்தல் அறிக்கையை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் வரும் 31-ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் வெளியிட இருப்பதாக அக்கட்சியின் புதுச்சேரி வேட்பாளர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்கு அக்கட்சியின் புதுச்சேரி மாநில பொருப்பாளர் சுப்ரமணியன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதனையடுத்து இன்று கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுப்ரமணியன், புதுச்சேரி தற்போது நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதற்கு கடந்த முறையில் ஆட்சியிலிருந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும், தற்போது ஆளும் காங்கிரஸ் கட்சியும் தான் காரணம் என குற்றம்ச்சாட்டினார்.
புதுச்சேரி மாநிலத்தை நிதிக்குழுவில் சேர்க்க முதல்வர் நாராயணசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ரங்கசாமியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் புதுச்சேரி மாநிலம் தற்போது நிதிச்சுமையில் சிக்கித்தவிப்பதாகவும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராகிய தன்னை தேர்வு செய்தால் மத்திய அரசுக்கு புதுச்சேரி அரசு செலுத்த வேண்டிய ரூ.8 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் வரும் 31-ஆம் தேதி புதுச்சேரிக்கு வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அன்று நடைபெறும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில், புதுச்சேரி மாநிலத்திற்கான தனி தேர்தல் அறிக்கையை வெளியிட இருப்பதாக சுப்ரமணியன் தெரிவித்தார்.