ஜாலியாக உலா வரும் முகமூடிக் கொள்ளையர்கள்.. வீடியோ காட்சியால் புதுவையில் திடுக்!
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரியில் கொள்ளையடித்து விட்டு ஒரு கும்பல் படு ஜாலியாக வலம் வருவது போன்ற வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிகளவில் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தட்டாஞ்சாவடி பகுதியில் மருத்துவர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிகொண்டிருக்கும்போதே உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 150 பவுன் தங்க நகை மற்றும் இரண்டரை லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
அதேபோல் கோரிமேடு பகுதியில் கொத்தனார் வீட்டில் 7 பவுன் நகை கொள்ளைடிக்கப்பட்டது. இதேபோன்று ரெட்டியார்பாளையம் பகுதியில் நகை கடை ஊழியரின் பூட்டிய வீட்டில் பட்டபகலில் காரில் வந்த கொள்ளையர்கள் 35 பவுன் நகை மற்றும் 70 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
தொடரும் கொள்ளைகள்
இவ்வாறு பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வரும் நிலையில், கடந்த 26 ஆம் தேதி நள்ளிரவு லாஸ்பேட்டை பகுதியிலுள்ள குமரன் நகரில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இரண்டு முகமூடி கொள்ளையர்கள் கையில் ஆயுதங்களை எடுத்துகொண்டு நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
திருடர்கள் வலம்
இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு லாஸ்பேட்டை போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் முகமூடி கொள்ளையர்கள் சர்வசாதாரணமாக வீதிகளில் நடந்து செல்லும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் புதுச்சேரி மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
குறைந்து விட்ட குற்றங்கள்
ஆனால் போலீசாரோ, கடந்தாண்டை ஒப்பிடும்போது இந்தாண்டு குற்றச்சம்வங்கள் வெகுவாக குறைந்துள்ளதாக கூறுகின்றனர். இதற்கு மாறாக புதுச்சேரியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 5 க்கும் மேற்பட்ட கொலைகள், 10 க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. மேலும் அண்டை மாநிலமான தமிழகத்திலிருந்து கொள்ளையர்கள் புதுச்சேரிக்குள் எளிதாக நுழைந்து இங்கேயே சில நாட்கள் முகாமிட்டு கொள்ளை சம்பவங்களை கட்சிதமாக முடித்துவிட்டு தமிழகத்திற்கு தப்பி செல்கின்றனர்.
ரோந்துகளை அதிகரிங்க
புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுக்க, போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்துவதோடு மட்டுமின்றி, தமிழகம் மற்றும் புதுச்சேரி என இரு மாநில போலீசாரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே குற்ற சம்பவங்களை தடுக்க முடிவும் என்பதில் மாற்று கருத்தில்லை.