கமலின் தொடர் விமர்சனம் குறித்த கேள்வி.. நேரடியாக பதில் சொல்லாத ஸ்டாலின்!
Recommended Video
புதுச்சேரி: சின்னத்தம்பியை டாப்சிலிப்பில் அடைத்தது போல் கிரண்பேடியை மத்திய அரசு மாற்ற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் கமல் குறித்த கேள்விக்கும் ஸ்டாலின் மறைமுகமாக விமர்சனம் செய்தார்.
நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் இலவச அரிசிக்கான கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும், அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும், அமைச்சர்களை ஆலோசிக்கமால் கிரண்பேடி அரசு அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட 39 கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முதல்வர் நாராயணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் 5-ஆவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாராயணசாமி எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள தனது வீட்டில் கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏற்றினார். இவருக்கு ஆதரவு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் நேரில் சந்தித்தார்.
அதுபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தொலைபேசி மூலம் நாராயணசாமிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் தர்ணா நடைபெறும் இடத்துக்கே ஸ்டாலின் நேரில் சென்று நாராயணசாமிக்கு ஆதரவு தெரிவித்தார்.
ராஜ்ஜியம்
இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ஆளுநர் பொறுப்பில் இருப்பவர் மக்களுக்கான திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார். புதுவையை போலீஸ் ராஜ்ஜியமாக மாற்ற நினைக்கிறார் கிரண்பேடி.
மோடி
ஆளுநர் கிரண்பேடி பாஜகவுக்கு அடிபணிந்து செல்வது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல் ஆகும். இதுவரையில் இந்த பிரச்சினையை பிரதமர் மோடி கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.
தேர்தலில் போட்டி
ஆளுநர் மூலம் குடைச்சல் கொடுத்து கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சிக்கிறது. அது கண்டிக்கத்தக்கது. மக்களை சந்தித்து தேர்தலில் போட்டியிட்டே ஆட்சியை பிடிக்க வேண்டும்.
ஒத்துழைப்பு
சின்னத்தம்பியை டாப்சிலிப்பில் அடைத்தது போல் கிரண்பேடியை மத்திய அரசு மாற்ற வேண்டும். டெல்லி திகார் சிறை போன்று புதுவை மாநிலத்தை நடத்த பார்க்கிறார். ஆளுநராக பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து புதுவை அரசுக்கு ஒத்துழைப்பு தராமல் இருந்து வருகிறார் என்றார் ஸ்டாலின்.
அரசியல் பேச்சு
இறுதியாக கமல்ஹாசன் திமுகவை விமர்சனம் செய்து பேசி வருகிறாரே. அதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள் என ஸ்டாலினிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் நான் அரசியல் பத்தி பேசிக்கிட்டு இருக்கேன் என்று ஸ்டாலின் பதில் அளித்தவுடன் அங்கிருந்த நாராயணசாமி உள்பட அமைச்சர்கள் சிரித்தனர்.