சாலையோரம் உறங்கிய கூலித் தொழிலாளி கொலை.. காரணம் துண்டு பீடி.. பரபர தகவல்கள்
புதுச்சேரி: புதுச்சேரியில் குடிபோதையில் சாலையோரம் உறங்கிய கூலித் தொழிலாளியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த வழக்கில் குற்றவாளி கைது. பீடிக்காக கொலை செய்ததாக கொலையாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
Recommended Video
கடலூர் மாவட்டம் வன்னியர்பாளைம் பகுதியை சேர்ந்தவர் டேனியல் (52). கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி, இரண்டு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
மது அருந்தும் பழக்கம் உள்ள டேனியல், அவ்வப்போது புதுச்சேரி எல்லைப்பகுதியான கன்னியகோவிலுக்கு வந்து மதுகுடித்துவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். சில நேரங்களில் மது குடித்துவிட்டு மதுக்கடைக்கு வெளியே டேனியல் படுத்து உறங்குவதுண்டு.
இதனிடையே வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு கன்னியகோவில் பகுதியில் உள்ள சாராயாக்கடையில் மது குடித்த டேனியல், பச்சைவாழியம்மன் கோவில் அருகே படுத்து உறங்கியுள்ளார். அப்போது அவரை மர்ம நபர் ஒருவர் தலையில் கல்லைபோட்டு கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்.
இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய கிருமாம்பாக்கம் காவல்நிலைய போலீசார், கொலை நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த டேனியலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் எழுப்பி வாக்குவாத்தில் ஈடுபட்டு, பின்னர் டேனியல் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது பதிவாகியிருந்தது.
சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்த நபரின் படத்தை வைத்து கன்னியகோவில் சாராயாக்கடையில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராஜாராம் டேனியலை கொலை செய்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து ராஜாராமை கைது செய்து விசாரணை நடத்தியதில், நேற்று முன்தினம் இரவு கன்னியகோவிலில் உள்ள சாராயக்கடையில் மது குடித்துவிட்டு, வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, பச்சைவாழியம்மன் கோவில் அருகே டேனியல் குடிபோதையில் படுத்திருந்துள்ளார்.
இதனை பார்த்த ராஜாராம் பீடி இருக்கும் என்று நினைத்து டேனியலின் சட்டை பையில் கையை விட்டுள்ளார்.
அப்போது கண்விழித்த டேனியல் அவரை திட்டியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அருகில் கிடந்த கல்லை எடுத்து டேனியலின் தலையில் போட்டு தாக்கினார். இதில் படுகாயமடைந்த டேனியல் சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்துள்ளார். புதுச்சேரியில் பீடிக்காக கூலித்தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.