சாலையோரம் உறங்கிய கூலித்தொழிலாளி.. தலையில் கல்லைப் போட்டு கொலை!
புதுச்சேரி: புதுச்சேரி அருகே குடிபோதையில் சாலையோரம் உறங்கிய கூலித் தொழிலாளியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.
Recommended Video
புதுச்சேரி அடுத்த கன்னியகோவில் பகுதியில் உள்ள மண்ணாதீஸ்வரர் கோவில் அருகே இன்று காலை சுமார் 50 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் தலையில், கல்லை போட்டு கொலை செய்யபட்ட நிலையில் கிடந்தார். இதனையடுத்து கொலை சம்பவம் தொடர்பாக கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் கடலூர் மாவட்டம் வன்னியர்பாளைம் பகுதியை சேர்ந்த டேனியல்(52) என்ற கூலித் தொழிலாளி என்பதும், மது அருந்தும் பழக்கும் உள்ளது எனபதும் தெரியவந்தது.
கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த கிருமாம்பாக்கம் போலீசார், கொலை நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த டேனியலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் எழுப்பி வாக்குவாத்தில் ஈடுபட்டு, பின்னர் டேனியல் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது பதிவாகியிருந்தது. சிசிடிவி காட்சிகளை கொண்டு டேனியலை கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அண்மை காலமாக புதுச்சேரியில் கொலை சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. இதனால் புதுச்சேரி மக்களும், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே போலீசார் இரவு நேரங்களில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டுமென்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.