தமிழக இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக புதுச்சேரியிலும் போராட்டம்.. தேசிய கொடி ஏந்தி எதிர்ப்பு!
Recommended Video
புதுச்சேரி: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவத்தை கண்டித்து, புதுச்சேரியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 500 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கையில் தேசியக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது நேற்று இரவு போலீசார் தடியடி நடத்தினர்.
இதனிடையே இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி மாநில தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சுதேசி பஞ்சாலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சுமார் 500 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு கையில் தேசியக்கொடி ஏந்தியும், சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் பதாகைகளை ஏந்தியவாறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மேலும் சென்னையில் இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்திய தமிழக போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோரிக்கை விடுத்தனர். இஸ்லாமியர்களின் போராட்டம் காரணமாக மறைமலையடிகள் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.