50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த மைனா குஞ்சுகள்... பனைமரம் ஏறி கூட்டில் வைத்த இளைஞர்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் காற்றின் வேகத்தால் நிலை தடுமாறி கீழே விழுந்த மைனா குஞ்சுகளை பனைமரம் ஏறி அதன் கூட்டில் சேர்த்துள்ளார் இளைஞர் ஒருவர்.
மனிதநேயமிக்க இந்த செயல் காரணமாக இளைஞர் ஆனந்துக்கு பாராட்டுக்களும், நன்றிகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
இதனிடையே இளைஞர் ஆனந்தின் உயிர்நேயம் தன்னை சிலிர்க்க வைத்துள்ளதாக கூறியிருக்கிறார் கத்துக்குட்டி திரைப்படத்தின் இயக்குநரும், பத்திரிகையாளருமான சரவணன்.
அயோத்தியில் ராமர் கோயில்...பூமி பூஜை...தங்க செங்கல் கொடுக்கும் மொகலாயர் வாரிசு!!
புதுக்கோட்டை மாவட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒசுவப்பட்டி என்ற கிராமத்தில் நிகழ்ந்த மனிதநேயமிக்க செயல் சமூக வலைதளங்களில் பெரியளவில் பாராட்டையும், வாழ்த்தையும் பெற்றுள்ளது. வயல்வெளி ஓரம் இருந்த பனைமரத்தில் இருந்து காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் மைனா குஞ்சுகள் கீழே விழுந்தன. சுமார் 50 அடி உயரத்தில் இருந்து விழுந்த மைனா குஞ்சுகள் சிறகு முளைக்காத நிலையில் தரையில் தத்தளித்துக் கொண்டிருந்தன.
உயிர்கள் மீது பாசம்
அப்போது அவ்வழியாக வந்த இளம் விவசாயி ஆனந்த், மைனா குஞ்சுகளை மீண்டும் அதன் கூட்டில் சேர்க்க விரும்பினார். இதையடுத்து கீழே விழுந்த மைனா குஞ்சுகளை எடுத்து தன் சட்டைக்குள் வைத்து பனைமரத்தின் மீது ஏறி அதன் கூட்டில் பாதுகாப்பாக வைத்தார். உயிர்கள் மீது பாசம் கொண்டு ஆனந்த் செய்த இந்த செயலுக்காக அவரை பலரும் சமூக வலைதளங்கள் மூலம் பாராட்டி வருகின்றனர்.
முன்னுதாரணம்
ஆனந்த் நினைத்திருந்தால் மைனா குஞ்சுகளை கண்டு கொள்ளாமல் கூட சென்றிருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாமல் தனது பாதுகாப்பை கூட கருத்தில் கொள்ளாமல் சிறகு முளைக்காத அந்த இளம் பறவைகளை மீண்டு அதன் கூட்டில் சேர்த்திருக்கிறார். ஒவ்வொருவரும் சாலைகளில் செல்லும் போது இது போன்ற நம்மால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்தால் அது மனித குலத்தில் பிறந்ததற்கான பயனாக அமையக்கூடும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது.
சிலிர்க்க வைத்தது
ஓசுவப்பட்டி கிராமத்தை சேர்ந்த இளம் விவசாயி ஆனந்தின் உயிர்நேயம் தன்னை சிலிர்க்க வைத்ததாகவும், அந்த தம்பிக்கு தனது வாழ்த்தை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார் கத்துக்குட்டி திரைப்படத்தின் இயக்குநரும், பத்திரிகையாளருமான சரவணன்.