ரெண்டு விக்கெட் காலி.. புதுச்சேரி காங்கிரஸ் அரசின் அடுத்த மூவ் என்ன?
புதுச்சேரி: ஆளும் காங்கிரஸ் அரசு மீதிருந்த அதிருப்தி காரணமாக அமைச்சர் நமச்சிவாயமும், அவருக்கு ஆதரவு தெரிவித்து எம்.எல்.ஏ தீப்பாய்ந்தானும் பதவி விலகியிருக்கும் நிலையில், அரசின் அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கப் போகிறது என்பதே அரசியல் விமர்சகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Recommended Video
புதுச்சேரியில் அரசியல் என்பது பெரிய அளவில் தமிழக மக்களால்... ஏன், அரசியல் நோக்கர்களாலும் கூட அவ்வளவாக கவனிக்கப்படாத அல்லது கவனிக்கப்பட தவறிய அரசியல் களமாகும். ஆனால், 2016க்கு பிறகு தவிர்க்க முடியாத அரசியல் அதகளங்கள் நிறைந்த களமாக மாறிவிட்டது.
கட்சியில் இருந்து நீக்கம்.. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நமச்சிவாயம் - அனல் களத்தில் புதுச்சேரி
2016 சட்டமன்ற தேர்தல்
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது காங்கிரஸ். அப்போதைய முதல்வர் என்.ரெங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸுக்கும், அகில இந்திய காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
எனினும், காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றி, தொடர்ந்து தேர்தலைச் சந்திக்காமல் இருந்து வந்த நாராயணசாமியை முதல்வராக்கியது. அதே சமயம், ஆட்சி போனால் என்ன... குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருப்போம் என புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கிரண் பேடியை நியமித்தது மத்தியில் ஆளும் பாஜக.
அதன் பிறகு கிரண் பேடிக்கும், மாநில அரசுக்கும் ஏற்பட்ட மோதல்களை நாம் பல சந்தர்ப்பங்களில் பார்க்க நேரிட்டது. 'யாருக்கு அதிகாரம்?' என்ற மோதல் அப்போது முதல் இப்போது வரை நீடித்து வருகிறது.
வெற்றிக்கு வித்திட்ட நமச்சிவாயம்
இதற்கிடையே நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம், இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நமச்சிவாயத்தின் 2016 தேர்தல் பணி.
மீண்டும் என்.ரெங்கசாமியே முதல்வராவார் என்றே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்ற பெரும் காரணமாய் இருந்தவர் தான் நமச்சிவாயம். புதுச்சேரியில் இவர் வகுத்த தேர்தல் வியூகம் ஒரு பக்கம் இருந்தாலும், கடைசி நேரத்தில் இவர் ஆதரவு தெரிவித்ததால் தான் நாராயணசாமிக்கு இதர சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்து அவர் முதல்வராக்கப்பட்டார் என்று ஒருபக்கம் கூறப்படுகிறது.
அதிருப்தி தான் காரணமா?
அதேசமயம், 2016 தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த தனக்கு தான் முதல்வர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்ததாகவும், கடைசி நேரத்தில் நாராயணசாமிக்கு கொடுக்கப்பட்டதால் அப்போதிலிருந்தே அவர் அதிருப்தியில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
கிரண் பேடி, ஆளும் காங்கிரஸ் அரசுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்த சூழலில், முதல்வர் நாராயணசாமி கண்ணீர் விடாத குறையாக புலம்பியபோதும், நமச்சிவாயம் பெரிதாக எதற்குமே ரியாக்ட் செய்யாமல் இருந்ததே அவரது அதிருப்திக்கு சான்று என்கின்றனர் புதுவை அரசியல் நோக்கர்கள்.
பாஜக அசைன்மெண்ட்
மேலும், சரியான நேரத்திற்காக காத்திருந்த நமச்சிவாயம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் நெருங்கும் இந்த சூழலில், தலைமை மீதான அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று கூறுகின்றனர்.
குறிப்பாக, தென் மாநிலங்களில் வலிமையாக கால் பாதிக்க நினைக்கும் பாஜகவின் அசைன்மெண்ட்டின் ஒரு சிறிய பகுதி தான் இது என்றும் கூறப்படுகிறது.
புதுச்சேரியில் இம்முறை சரியான கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கும் பாஜக அணுகிய பிறகு தான், நமச்சிவாயம் இந்த முடிவை எடுத்துள்ளார்.
அதன் காரணமாகவே 'அவர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார்' என்று புதுவை காங்கிரஸ் தலைவர் அறிவித்த அடுத்த சில நிமிடங்களில், 'நீங்க என்ன என்னை நீக்குறது.. நான் உங்களை நீக்குறேன்' மாடுலேஷனில் தனது எம்.எல்.ஏ. பதவியையும், அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்திருக்கிறார். இது முழுக்க முழுக்க பாஜகவின் ஸ்டிராடஜி என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.
சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் அமைச்சர் நமச்சிவாயம் தான் கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். அதேபோல், நமச்சிவாயத்திற்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ தீப்பாய்ந்தானும் தனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ளார்.
ஆகவே, மிக விரைவில் பாஜகவில் நமச்சிவாயம் சங்கமிக்கும் நிகழ்வும் அரங்கேறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், மீண்டும் திமுகவுடன் கூட்டணி வைத்து புதுச்சேரியில் தேர்தலை களம் காண திட்டமிட்டிருக்கும் காங்கிரஸ், கட்சியின் முக்கிய தளபதி விலகியிருந்தாலும், பாஜக எதிர்ப்பு மனநிலை எனும் ஆயுதம் மூலம் அதனை ஈடுகட்டிவிடலாம் என்று கணக்கு போட்டு வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
எது எப்படியோ... புதுச்சேரியிலும் தேர்தல் களம் களை கட்டியுள்ளது.