கிரண் பேடி கொட்டத்தை அடக்க வந்த தீர்ப்பு.. வென்றது ஜனநாயகம்.. நாராயணசாமி செம ஜாலி!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என்றும், இதன் மூலம் ஜனநாயகம் வென்றுள்ளதாக முதலமைச்சர் நாரயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே தொடர்ந்து அதிகார மோதல் இருந்து வருகிறது.
இதன் உச்சகட்டமாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மக்கள் நல திட்டங்களை தடுத்து வருவதாக கூறி, முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் ஆளுநர் மாளிகை முன்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி அரசின் செயல்பாட்டில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு உரிமை இல்லை.. ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு
லட்சுமி நாராயணன் வழக்கு
இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு முதலமைச்சரின் பாராளுமன்ற செயலாளராக உள்ள லஷ்மிநாராயணன் எம்எல்ஏ, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
தனிப்பட்ட அதிகாரம் இல்லை
அந்த தீர்ப்பில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் உள்ளது என்றும், துணைநிலை ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு துணைநிலை ஆளுநர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் மத்திய உள்துறை அமைச்சகம் கிரண்பேடிக்கு வழங்கிய அதிகாரத்தையும் ரத்து செய்து உத்தரவு உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்துள்ளது.
நாராயணசாமி மகிழ்ச்சி
உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கியுள்ள இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் உள்ளது என உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு.
கொட்டத்தை அடக்க வந்த தீர்ப்பு
இதன் மூலம் ஜனநாயகம் வென்றுள்ளதாகவும், இது புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்தார். இந்த தீர்ப்பு புதுச்சேரி மக்களின் வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கும் என்றார். மேலும் பேசிய அவர், இந்த தீர்ப்பு துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் கொட்டத்தை அடக்குவதற்கான தீர்ப்பு என்றார்.