நிர்மலா சீதாராமனின் அடுத்தடுத்த அறிவிப்புகள்- ஏழைகளுக்கு எதுவுமே இல்லை- நாராயணசாமி அட்டாக்
புதுச்சேரி: நிதியமைச்சரின் அறிவிப்பில் ஏழை எளிய மக்களுக்கு நிதி ஆதாரத்தை உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்ச்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது: காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய மூன்று பகுதியும் தற்போது பச்சை மண்டலமாக இருக்கிறது. அகில இந்திய அளவில் உமிழ்நீர் பரிசோதனை செய்கின்ற மாநிலங்களில் முதல் இடத்தில் டெல்லியும், 2 வது இடத்தில் புதுச்சேரியும் உள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சரி செய்வதற்கு பல துறைகளுக்கு ரூ.20 லட்சம் கோடி செலவு செய்வதாக இரண்டு தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். குறிப்பாக, வங்கிகள், தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு, குறு தொழில் செய்வோர், பெரிய தொழிற்சாலைகளுக்கு பல அம்சங்களை குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசியிருந்தார். அதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தராமன் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அவர் ரூ.3 லட்சம் கோடியை சிறு, குறு, நடுத்தர தொழில் நடுத்துபவர்களுக்கு வங்கிகள் மூலமாக கடன் கொடுப்பது, வட்டியை கொடுத்து கடன் கொடுப்பது, வங்கியில் வாங்கி கடனை திரும்ப செலுத்த காலக்கெடு கொடுப்பது, தொழிற்சாலைகளுக்கான மூலதனத்தை ரூ.50 லட்சத்திலிருந்து ஒரு கோடியாக உயர்த்தியுள்ளார். இதில் வராக்கடன் உள்ள சிறு தொழில் நிறுவனங்களுக்கும் கடன் கொடுப்பதற்காகவும், சில தொழிற்சாலைகளுக்கு தேவைப்படுகிற மூலதனத்தை பயன்படுத்துவதற்காகவும், அதேபோல் வட்டியை குறைத்து கொடுப்பதற்கும் பல அம்சங்களை குறிப்பிட்டுள்ளார்.
மரத்தில் சேலை கட்டி சிறைக்குள் இறங்கிய மர்ம நபர்கள்.. கைதிகளுக்கு செல்போன் சப்ளை..
ஏழைகளுக்கு நிதி ஆதார திட்டம் இல்லை
கட்டுமான பணிகளுக்கு சில சலுகைகளை வழங்கியுள்ளார். மேலும் தனியார் கடன் கொடுக்கும் அமைப்புகளுக்கும் சலுகைகளை அறிவித்துள்ளார். வருமான வரி செலுத்துவோருக்கான காலக்கெடுவை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளார். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக மாற்றி சலுகை வழங்கியுள்ளார். இதில் முக்கிய அம்சமாக ரூ.3 லட்சம் கோடியை சிறு, நடுத்தர தொழில்களுக்கும், ரூ.2 லட்சம் கோடியை தனியார் வங்கிகள் மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கும், மின்சார உற்பத்தி செய்யும் நிலையங்களுக்கு ரூ.90 ஆயிரம் கோடி உதவி செய்யும் திட்டத்தையும் கொண்டு வந்துள்ளார். இதில் ஏழை ஏளிய மக்களுக்கு நிதி ஆதாரத்தை உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை.
மாநிலங்களின் வருவாய் இழப்பு
இந்த நாட்டில் உள்ள 13 கோடி மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளனர். குறிப்பாக, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், விவசாயிகள், அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முதன் முதலாக மத்திய அரசு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என கூறினோம். இந்த குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். இதற்கு ஆகின்ற தொகை ரூ.25 ஆயிரம் கோடிதான். இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியும். இதற்கான வாய்ப்பை மத்திய அரசு உருவாக்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மாநிலங்கள் நிதி ஆதாரம் இல்லாமல் தவித்து கொண்டு இருக்கின்றன. மாநிலங்களின் வருவாய் கடந்த மார்ச், ஏப்ரல் மிகப்பெரிய அளவில் குறைந்துவிட்டது. ஆகவே, மத்திய அரசு மாநிலங்களுக்கு தாராளமாக நிதி கொடுக்க வேண்டும். மாநிலங்களுக்கு ஏற்படுகிற வருவாய் இழப்பீட்டை மத்திய அரசுதான் கொடுக்க வேண்டும். ஊரடங்கை அறிவித்தது பிரதமர். அதனை அனைத்து மாநிலங்களும் நடைமுறைபடுத்தி உள்ளோம். எனவே, வருவாய் இழப்பை மத்திய அரசுதான் ஈடு செய்ய வேண்டும் என காணொலியில் பேசியபோது பிரதமரிடம் நாங்கள் கூறினோம்.
அணுகுமுறை தவறானது
ஆனால், பொருளாதார மேம்பாட்டுக்காக பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடியில் அவர்கள் மாநில அரசுக்கு எந்த அளவு உதவி செய்ய போகிறார்கள் என்று குறிப்பிடப்படவில்லை. அதேபோல் ஏழை மக்களுக்கு நிதி ஆதாரத்தை எப்படி கொடுக்கப் போகிறார்கள் என்ற அம்சமும் அதில் இல்லை. மத்திய நிதியமைச்சர் அறிவித்ததை பார்க்கும்போது சிறு குறு, தனியார் வங்கிகள் உள்ளிட்டவைகளுக்கு மத்திய அரசு கடனுதவி செய்கிறதே தவிர, அவர்களுக்கு தொழிலை மேம்படுத்த சலுகைகள் வழங்கவில்லை. வறுமையால் வாடும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்களை மத்திய அரசு அறிவித்திருந்தால் உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்கும் சக்தி அதிகரித்திருக்கும் ஆனால், கடனை கொடுத்து திருப்பி வாங்குவது என்பது சரியான அணுகுமுறையாக இருக்காது.
லாக்டவுன் குறித்து கருத்து
பிரதமரிடம் நான் பேசும்போது ரூ.1 லட்சம் கோடி எல்லா மாநிலங்களுக்கும், வருவாய் இழப்புக்காக ஈடுசெய்வதற்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று கேட்டேன். இதுவரை பிரதமரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. 17-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து மாநிலங்களின் கருத்துக்களை பிரதமர் கேட்டுள்ளார். மாநிலங்களின் கருத்துக்களை அனுப்பும் கோப்பை தயாரித்து வருகிறோம். மாநில வருவாய் குறைந்த இக்கட்டான சூழ்நிலையிலும் புதுச்சேரி மாநில மக்கள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்.
பட்ஜெட் கூட்டம் அறிவிப்பு
மத்திய அரசின் நிதியுதவியை பெறும் முயற்சியை எடுத்து வருகிறோம். இதற்காக மத்திய உள்துறை அமைச்சருடன் தொலைபேசியில் பேசியுள்ளேன். அவரும் பரிசீலிப்பதாக கூறியுள்ளார். இதற்கிடையில் 2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் போடும் நடவடிக்கையையும் நாங்கள் எடுத்து வருகிறோம். மத்திய அரசின் ஒப்புதல் வந்தவுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டப்படும். மக்கள் நல்வாழ்வு திட்டங்களுக்கு அதிகப்படியான கவனம் செலுத்தி திட்டங்களை வகுக்க அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என நாராயணசாமி தெரிவித்தார்.