புதுச்சேரியை பேசாம திருநங்கைன்னு சொல்லிடுங்களேன்.. நாராயணசாமி அதிரடி கோரிக்கை!
Recommended Video
புதுச்சேரி: ஜி.எஸ்.டி உள்ளிட்ட பல்வேறு வருவாயின்போது மட்டும் புதுச்சேரியை மாநிலமாக பார்க்கும் மத்திய அரசு, மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி அளிக்கும்போது மட்டும் யூனியன் பிரதேசமாகப் புதுச்சேரியை பார்க்கின்றது. அதற்கு எங்களை திருநங்கைகள் என என்று அறிவித்து விடுங்கள் என முதல்வர் நாராயணசாமி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வளர்ந்து வரும் இந்திய நிதி கூட்டாட்சித் தத்துவத்தின் சவால்கள்' என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசும்போது அதிரடியாக பேசினார்.
முதல்வர் நாராயணசாமியின் பேச்சிலிருந்து... சமீபத்தில் யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகியவை 15-வது நிதிக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் யூனியன் பிரதேசங்களான புதுச்சேரியும், டெல்லியும் நிதிக்குழுவில் சேர்க்கப்படவில்லை. புதுச்சேரி மாநிலத்தை நிதிக்குழுவில் சேர்க்க வேண்டும் என்று பிரதமர், நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் எனப் பலரையும் சந்தித்து வலியுறுத்தினேன். ஆனால், அதை செயல்படுத்தாமல் புதிதாக பிரித்த மாநிலத்தை மட்டும் சேர்த்துள்ளனர்.
மத்தியில் மாநிலங்களுக்கான நிதிக்குழு, யூனியன் பிரதேசங்களுக்கான நிதிக்குழு என இரு நிதிக்குழுக்கள் இருக்கின்றன. ஆனால், இவை இரண்டிலுமே புதுச்சேரி மாநிலம் இல்லை. ஜி.எஸ்.டி, சுங்கம் உள்ளிட்ட பல்வேறு வருவாயை மத்திய அரசு பெறும்போது மட்டும் புதுச்சேரியை ஒரு மாநிலமாக மத்திய அரசு கருதுகிறது. ஆனால், மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டின்போது மட்டும் யூனியன் பிரதேசமாகப் பார்க்கிறது. இதற்கு எங்களை திருநங்கை என அறிவித்துவிடுங்கள். எங்களிடம் வளம் உள்ளது. ஆனால், நிதியில்லாமல் பல்வேறு சிக்கல்களில் தவிக்கிறோம் என்றார்.
மத்திய அரசின் மீதான கடுமையான விமர்சனத்தை முதல்வர் நாராயணசாமி முன்வைத்தாலும், திருநங்கைகளோடு ஒப்பிட்டுப் பேசிய விவகாரம் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சகோதரன் சமூக நல மேம்பாட்டு இயக்கத்தை சேர்ந்த திருநங்கைகள் முதல்வர் நாராயணசாமி அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்தனர்.
அப்போது அவர்கள் முதல்வரிடம் அளித்த கடிதத்தில், திருநங்கைகளை பற்றி முதல்வர் தெரிவித்த கருத்தை தவறாக சித்தரிக்கும் முயற்சியாக இதனை பார்க்கிறோம். புதுச்சேரி மாநிலம் மத்திய அரசின் மூலமாக மாநிலமும் அல்லாமல் யூனியன் பிரதேசமும் இல்லாமல் திருநங்கைகள் சமூகத்தை இந்த நாடு எவ்வாறு ஒதுக்கி வைத்துள்ளதோ அதேபோல புதுச்சேரி மாநிலத்தையும் ஒதுக்கி வைத்துள்ளது என்பதே முதல்வர் அவர்களின் கருத்தாகவே பார்க்கிறோம் என்றும், உச்சநீதிமன்றம் பல்வேறு உரிமைகளை திருநங்கைகள் சமூகத்திற்கு அளித்தும் அந்த சமூகத்திற்கான விடுதலை கிடைக்கவில்லை.
அதேபோல உச்சநீதிமன்றமும் உயர்நீதி மன்றமும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு தான் அதிகாரம் என்று கூறியும் இதுநாள் வரை புதுச்சேரி அரசு மற்றும் மக்களின் நிலையும் கேள்விக்குறியாக உள்ளது. இன்று புதுச்சேரி மக்களின் விடுதலையும், திருநங்கைகளின் விடுதலையையும், முதல்வர் தெரிவித்த கண்டனம் திரும்பி பார்க்க வைத்துள்ளதாகவே உணர்கிறோம் .
மேலும் திருநங்கைகள் வாழ்வு இன்றுள்ள புதுச்சேரி மாநிலத்தின் நிலையாக உள்ளதை உணர்ந்து, புதுச்சேரி மாநிலத்தை திருநங்கைகளோடு ஒப்பிட்ட முதல்வர் மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தை நடத்துவது போல் இல்லாமல் எங்கள் துன்பநிலை உணர்ந்து தனது அதிகாரத்தை வைத்து எங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை மாற்றித்தரும் முன்னுதாரன மாநில முதல்வராக திகழ வேண்டுமென்ற வேண்டுகோளை வைக்கிறோம் என்றும், தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.
இதற்கு நன்றி தெரிவித்த முதல்வர் நாராயணசாமி, வீடில்லாமல் தங்க வசதி இல்லாமல் கூட்டம் கூட்டமாக வாழும் திருநங்கைகளுக்கு நிரந்தமாக வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததோடு இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளியும் வைத்தார்.