நிபந்தனைகளை ஏற்க முடியாது... பொதுவெளியில் விவாதிக்கத் தயாரா... கிரண்பேடி பதிலடி
Recommended Video
புதுச்சேரி: பேச்சுவார்த்தைக்காக விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்க இயலாது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதி உள்ளார்.
மாலையில் பேச்சு நடத்த வருமாறு ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தார் கிரண்பேடி; சந்திப்புக்கு நாராயணசாமி நிபந்தனை விதித்து கடிதம் எழுதியதற்கு கிரண்பேடி பதில் கடிதம் எழுதி உள்ளார்.
அதில், பேச்சுவார்த்தைக்கு உகந்த நேரம், இடம், பங்கேற்கும் அதிகாரிகள் பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் ஆளுநரின் செயலகத்திற்கு விவரங்களை தெரிவித்தால் பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று பேச்சுவார்த்தை கிடையாது எனவும் பொதுவெளியில் விவாதிக்கத் தயார் என்றும் ஆளுநர் கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி முதல்வர் நாளை வருகை
துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிரான முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க நாளை புதுச்சேரி வருகிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
திருமாவளவன் வலியுறுத்தல்
புதுச்சேரி விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்றும், துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பேடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த பின்னர் இதனை தெரிவித்தார்.
ஆளுநர் அழைப்பு
முன்னதாக, கிரண்பேடி டெல்லி சென்ற நிலையில் இன்று அவசர அவசரமாக புதுச்சேரி திரும்பினார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளேன்.
சமூகவலைதளம்
ஆளுநர் மாளிகையில் மாலை 6 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகஅந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் நாராயணசாமி கூறுகையில் கிரண்பேடி என்னுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்ததை சமூக வலைதளங்களில் மட்டுமே பார்த்தோம் என்றார்.
முதல்வர் பேட்டி
எனக்கோ, அமைச்சர்களுக்கோ அவர் எந்த வித அழைப்பையும் விடுக்கவில்லை. கிரண்பேடி பேச்சுவார்த்தைக்கு அழைத்ததே எங்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்றார். இதனைத் தொடர்ந்து, முதல்வர் நாராயணசாமி நிபந்தனை விதித்து கடிதம் எழுதியதற்கு கிரண்பேடி பதில் கடிதம் எழுதி உள்ளார்.