4- ஆவது நாளாக தொடரும் தர்ணா.. கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம்.. புதுவை முதல்வர்
Recommended Video
புதுச்சேரி: துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக இன்று நான்காவது நாளாக முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் தொடர்கிறது.
நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்கப்படும் இலவச அரிசிக்கான கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும், அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும், அமைச்சர்களை ஆலோசிக்காமல் கிரண்பேடி அரசு அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட 39 கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முதல்வர் நாராயணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதை நிறைவேற்றாத கிரண்பேடியை கண்டித்து முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கடந்த 13 ஆம் தேதி முதல் கருப்பு சட்டை அணிந்து ஆளுநர் மாளிகை வெளியே தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடிய கிரண்பேடியோ புதுச்சேரியில் இல்லாமல் டெல்லியில் முகாமிட்டுள்ளதால் முதல்வரின் போராட்டம் இன்று நான்காவது நாளாக தொடர்ந்து வருகிறது. மேலும் கிரண்பேடி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதேபோல் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் கிரண்பேடியை கண்டித்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் புதுச்சேரியில் ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வரும் 20 ஆம் தேதிதான் புதுச்சேரி திரும்புகிறார்.