அவங்க திட்டுனா பதிலுக்கு திட்டமாட்டோம்.. கம்யூனிஸ்ட் பற்றி நாராயணசாமி கப்சிப்!
புதுவை: கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி விமர்சிக்க மாட்டோம் என்று கூறிய புதுவை முதல்வர் நாராயணசாமி, பாஜக தேர்தல் அறிக்கை ஜீரோ என்றும், ஊடகங்கள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
புதுச்சேரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து முதல்வர் நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "பாஜக தேர்தல் அறிக்கை தனிமனித சுதந்திரத்தை பறிக்கக்கூடியது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத தேர்தல் அறிக்கை. குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு எந்த திட்டங்களும் பாஜக தேர்தல் அறிக்கையில் இல்லை.
திமுகவுக்கு 17.. அதிமுகவுக்கு 1.. மற்றவர்களுக்கு முட்டையாம்.. சொல்கிறது ஜூனியர் விகடன் சர்வே
ராகுல் பிரதமர்
காங்கிரஸ் - பாஜக தேர்தல் அறிக்கைகளை ஒப்பிடும் போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை கதாநாயகன். பாஜக தேர்தல் அறிக்கைக்கு பூஜ்ய மதிப்பெண் தான் தருவேன். பாஜக தென் மாநிலங்களை புறக்கணிக்க கூடிய கட்சி. பாஜக வடநாட்டில் உள்ள ஒருசிலருடைய கட்சி. எனவே மக்கள் இந்த தேர்தலில் பாஜகவை புறக்கணித்து, ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவார்கள்
நாராயணசாமி விளக்கம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கிறது. கேரளாவில் எதிர்த்து நிற்கிறது. இது அந்தந்த மாநிலத்திற்கான நிலைப்பாடு. மாநிலத்திற்கு மாநிலம் கூட்டணி நிலைபாடு மாறும். ராகுல்காந்தியை கம்யூனிஸ்ட் கட்சி எந்த விமர்சனம் செய்தாலும் திரும்ப விமர்சனம் செய்ய வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம்
வயிற்றில் அடிக்கும் சாலை
சென்னை -சேலம் இடையே எட்டு வழிச்சாலை திட்டம் தேவையில்லை என்பது என்னுடைய கருத்து. பல லட்சக்கணக்கான விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அந்த திட்டம் நிச்சயம் தேவையில்லை.
ஒருதலைபட்சம்
அடுத்து மத்தியில் பாஜகதான் ஆட்சிக்கு வரும் என்ற ஊடகங்களுடைய கருத்து கணிப்பை மக்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள். ஊடகங்கள் தற்போது ஒருதலைப்பட்சமாக செயல்பட ஆரம்பித்துவிட்டன" இவ்வாறு நாராயணசாமி பேசினார்.