இதுதாங்க கிரண்பேடியின் தரம்.. இதை புரிந்து கொள்ளுங்கள்.. காகா யோகா டுவீட்டுக்கு நாராயணசாமி பதிலடி!
புதுவை: கிரண்பேடியின் தரம் இதுதான் என்பதை அறிந்து கொள்ளலாம் என காகா யோகா டுவீட்டுக்கு முதல்வர் நாராயணசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் இலவச அரிசிக்கான கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும், அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும், அமைச்சர்களை ஆலோசிக்கமால் கிரண்பேடி அரசு அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட 39 கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முதல்வர் நாராயணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதை நிறைவேற்றாத கிரண்பேடியை கண்டித்து முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கடந்த 13 ஆம் தேதி முதல் கருப்பு சட்டை அணிந்து ஆளுநர் மாளிகை வெளியே தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
6-ஆவது நாள்
நேற்று நாராயணசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்திருந்த கிரண்பேடி நீண்ட நேரம் காக்க வைத்தார் என்று குற்றம்சாட்டினார் முதல்வர். இந்த நிலையில் இன்று 6-ஆவது நாளாக தர்ணா போராட்டம் நீடித்து வருகிறது.
காக்கை ஆசனம்
முதல்வர் நாராயணசாமியின் போராட்டத்தை கிண்டல் செய்யும் விதமாக கிரண்பேடி டிவிட் ஒன்று செய்துள்ளார். அதில் ''செய்தியாளர் ஒருவர் என்னிடம் தர்ணாவும் ஒருவகை யோகாவா? என்று கேட்டார். அதற்கு நான் அவரிடம் 'ஆமாம், ஆனால் அது சூழ்நிலையை பொறுத்தது, நீங்கள் எதற்காக அமர்ந்துள்ளீர்கள், என்ன ஆசனம் செய்கிறீர்கள், என்ன சத்தம் எழுப்புகிறீர்கள் என்பதை பொறுத்தது' என்று கூறினேன்.'' என்று கிரண்பேடி டுவீட் செய்துள்ளார்.
|
சர்ச்சை
இத்துடன் இரு காக்கைகளின் புகைப்படங்களை வைத்து காகா யோகா என முதல்வரின் நிறத்தை கிண்டல் செய்யும் வகையில் புகைப்படம் வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தரம்
இதுகுறித்து முதல்வர் நாராயணசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நாராயணசாமி பதிலளிக்கையில் புதுவை ஆளுநர் கிரண் பேடி போடும் டுவீட்டுகளையெல்லாம் நான் பார்ப்பதில்லை. காகா யோகா என விமர்சித்ததன் மூலம் கிரண்பேடியின் தரத்தை அறிந்து கொள்ளலாம் என்றார் நாராயணசாமி.