6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி
புதுச்சேரி: 6 நாள்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது தொடர்பாக சட்டசபை உறுப்பினர்களுடனும் கூட்டணி கட்சித் தலைவர்களுடனும் ஆலோசனை முதல்வர் நாராயணசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இலவச வேட்டி சேலை, நியாய விலைக் கடைகளில் அரிசி, மில் ஊழியர்களுக்கு ஊழியம் உள்பட 39 கோப்புகளில் ஆளுநர் கிரண்பேடி கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பி விட்டதாக கடந்த 13-ஆம் தேதி முதல்வர் நாராயணசாமி பரபரப்பு புகாரை அளித்தார்.
இதையடுத்து ஆளுநர் மாளிகையை சுற்றி முதல்வரும் அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் கட்சி தொண்டர்களும் தர்ணாவில் ஈடுபட்டனர். இரவு நேரங்களில் செல்போன் வெளிச்சத்தில் கோப்புகளையும் முதல்வர் பார்வையிட்டு கையெழுத்திட்டார்.
இழுபறி
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அவசர அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டார் ஆளுநர் கிரண்பேடி. இதையடுத்து நேற்று மதியம் புதுவை திரும்பிய அவர் நாராயணசாமியை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். எனினும் நேற்று பேச்சுவார்த்தையில் சற்று இழுபறி நிலவியது.
மீண்டும் பேச்சுவார்த்தை
இதனிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், திமுக தலைவர் ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆகியோர் நாராயணசாமி ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தை
5 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை சுமார் நான்கரை மணி நேரம் கழித்து நிறைவடைந்தது. இதில் இலவச வேட்டி சேலை, இலவச அரிசி உள்ளிட்ட 5 முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஆலோசித்து முடிவு
இந்த பேச்சுவார்த்தையில் துறை செயலாளர்கள், தலைமை செயலாளர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி கூறுகையில் ஆளுநருடனான பேச்சுவார்த்தை நிறைவடைந்தது. 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் ஆலோசனை நடத்தி முடிவு அறிவிக்கப்படும் என்றார். அதன்படி ஆலோசனை நடத்தி வருகிறார்.