கணவர் பெயரை இனிஷியலா போட நோ சொன்ன கிரண்பேடி.. தந்தை, தாய் பெயரே போதும்!
புதுச்சேரி: பெண்கள் திருமணத்துக்கு பிறகு தங்களுடைய கணவர் பெயரை இனிஷியலாக போட கட்டாயப்படுத்த கூடாது என்றும், அவர்கள் விருப்பப்பட்டால் தந்தை, தாய் பெயரை போட்டுக்கொள்ளலாம் என தேசிய பெண் குழந்தைகள் தின விழாவில் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பேச்சு.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் இந்திராகாந்தி தேசிய கலை மையத்தின் சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இதில் துணை ஆளுநர் கிரண்பேடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்ட இவ்விழாவில், பெண் குழந்தைகளை பாதுகாப்பதை வலியுறுத்தி, பொம்மலாட்டம் மற்றும் குறும்படங்கள் திரையிடப்பட்டது.
இதன் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, பெண் குழந்தைகள் சாபம் அல்ல, அவர்கள் வாழ்வின் வரம். ஆண்கள், பெண்களை சமமாக பாவிக்க வேண்டும். இன்றைக்கு பெண் குழந்தைகள் தைரியமாக உள்ளனர். சுதந்திரமாக யோசிக்கின்றனர்.
இதற்கெல்லாம் காரணம் கல்விதான். பெண்கள் திருமணத்துக்கு பிறகு தங்களுடைய கணவர் பெயரை இனிஷியலாக போட்டுக்கொள்கின்றனர். இதனை கட்டாயப்படுத்த கூடாது. விருப்பப்பட்டால் தந்தை, தாய் பெயரை போட்டுக்கொள்ளலாம் என பேசினார்.