கல்யாணத்துக்கும் போயாச்சு.. காய்ச்சலுக்கு மருந்தும் குடிச்சாச்சு.. எப்பூடி!
விருந்தினர்களுக்கு நிலவேம்பு கசாயத்தை மணமக்கள் வழங்கினார்கள்.
புதுவை: வர்ற வர்ற கல்யாண வீடுகள் எல்லாம் இப்போதான் உண்மையிலேயே களை கட்ட ஆரம்பிருக்கு!! கல்யாண பொண்ணு, மாப்பிள்ளைங்க எல்லாம் இப்போ என்னமா யோசிக்கிறாங்க தெரியுமா?!!
கொஞ்ச நாளைக்கு முன்னாடி விழுப்புரம் பக்கம் ஒரு கல்யாணம் ஆச்சு. அதில் விதவிதமா அறுசுவை சாப்பாடு போடுவாங்கன்னு போன விருந்தாளிகளுக்கு கம்பு, கேழ்வரகு கூழும், தொட்டுக்கொள்ள ஊறுகாயும் கொடுக்கப்பட்டது. இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத விருந்தாளிகள் ஆசை தீர வாங்கி வாங்கி குடித்துவிட்டு மணமக்களுக்கும் ஒரு சபாஷ் போட்டுவிட்டு போனார்கள்.
இப்போ இதே மாதிரி இன்னொரு கல்யாணம் நடந்திருக்கு. புதுவையில்தான் புதுமையா இந்த கல்யாணத்தை நடத்தியிருக்காங்க. ஆரோவில் அருகே சஞ்சீவி நகரை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் ஒரு இசை கலைஞர். இவருக்கும், சென்னையை கீர்த்திக்கும்தான் கல்யாணம்.
இன்று காலை திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் உள்ள ஒரு மண்டபத்தில் கல்யாணம் நடந்தது. இதில் இரு தரப்பு வீட்டிலும் இருந்து ஏராளமானோர் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர். திருமணம் முடிந்து சாப்பிட்டு விட்டு ஒவ்வொருவராக கிளம்பி செல்ல ஆரம்பித்தனர். அந்த நேரம் பார்த்து பொண்ணு, மாப்பிள்ளையை மேடையில் காணோம். இருவரும் மண்டப வாசலில் நின்று கொண்டிருந்தனர்.
தங்களது கல்யாணத்தில் பங்கேற்றவர்களுக்கு எல்லாம் நிலவேம்பு கசாயத்தை இருவரும் வழங்கினர். டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தற்போது அதிகமாக பரவி வருவதால் விழிப்புணர்வுக்காக இந்த நிலவேம்பு கசாயம் வழங்குவதாக மணமக்கள் கூறினார்கள். இதனை கேட்ட அனைவரும் மறுக்காமல் வாங்கி குடித்ததுடன், மணமக்களை வாழ்த்தியும் பாராட்டி விட்டும் சென்றார்கள்.