24மணி நேரத்தில் 9பேர் சாவு.. குவியும் நோயாளிகள், திணறும் புதுச்சேரி, நிரம்பி வழியும் ஆஸ்பத்திரிகள்!
புதுச்சேரி: கொரோனா தொற்றால் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழப்புகள் கிடுகிடுவென உயர்வது அம்மாநில மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த செவ்வாய்கிழமை (இன்று) காலை முதல் மாலை வரை முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பு உயர்ந்து வரும் அதேநேரத்தில் உயிரிழப்பும் கடுமையாக உயர்வது அம்மாநில மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,396 ஆக உயர்ந்துள்ளது. இதில். இதுவரை 4,909 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 3,364 பேர் ஜிப்மர் மற்றும் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சீனாவை ஆச்சர்யப்படுத்திய பாகிஸ்தான்.. கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட பரிசோதனை.. மாஸ் முயற்சி!
திணறும் புதுச்சேரி
இது ஒருபுறம் எனில் தொற்று அறிகுறியுடன் பரிசோதனைக்காக புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் குவிந்து வருகிறார்கள். அங்கு ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். இதனால் தொற்று பாதிப்பு மேலும் உயரும் அபாயம் உள்ளது. இதனிடையே அதிகப்படியான மக்கள் தொற்று பாதிப்புடன் புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனைக்கு குவிந்த காரணத்தால் படுக்கைகள் அங்கு நிறைந்து விட்டது.
அறிகுறி வந்தால் வாங்க
இதனால் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களைத் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திகொள்ள மருத்துவ அதிகாரிகள் பரிந்துரைத்து வருகிறார்கள். காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் மட்டும் மருத்துவமனையை அணுகும்படி வலியுறுத்தி உள்ளனர். அதேநேரம் அறிகுறிகளுடன் புதிதாக வரும் நோயாளிகளை தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்து வருகிறார்கள்.
இதுவரை 370 பேர் பலி
கொரோனா தொற்றுக்கு புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 9 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதேபோல் இன்று ஒரேநாளில் 370 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
புதுச்சேரி ஊரடங்கு
இதனால் புதுச்சேரி அரசு கொரோனா தொற்றின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக ஒவ்வொரு வாரம் செவ்வாய்க்கிழமை அன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தது. இதன்படி இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை புதுச்சேரி முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. மருந்தகம், பால் நிலையங்கள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி முழுமையாக வெறிச்சோடி காணப்படுகிறது.