25 ஆம் தேதி முதல் ஸ்டிரைக்.. என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் அறிவிப்பு
புதுச்சேரி: நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கைகள் தொடர்பாக புதுச்சேரியில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தையில் வரும் 25 ஆம் தேதிக்குள் என்.எல்,சி நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய முடிவெடுக்க தொழிற்சங்கத்தினர் கெடு விதித்துள்ளனர்.
நெய்வேலி என்.எல்.சி யில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றார்கள். இவர்களது நீண்ட நாள் கோரிக்கையான பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கூறி தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் 25 ந் தேதி முதல் வேலை நிறுத்தப்போராட்டம் நடத்த இருப்பதாக அனைத்து தொழிற்சங்கத்தினரும் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கினார்கள்.
இதனையடுத்து புதுச்சேரியில் உள்ள மத்திய தொழிலாளர் நல உதவி ஆணையர் அலுவலகத்தில் மத்திய தொழிலாளர் நல உதவி ஆணையர் கணேசன் முன்னிலையில் என்.எல்.சி நிர்வாக அதிகாரிகள், அண்ணா தொழிற்சங்கம், தொ.மு.ச, சி.ஐடியு உள்ளிட்ட 7 தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சு வார்த்தையில் வரும் 25 ந் தேதிக்கு முன்பாக தொழிலாளர்கள் கோரிக்கைகள் தொடர்பாக என்.எல்.சி நிர்வாகம் ஆலோசித்து உரிய முடிவை எடுக்க என்.எல்.சி அதிகாரிகளுக்கு உதவி ஆணையர் கணேசன் அறிவுறுத்தினார். இதனை ஏற்றுக்கொண்ட தொழிற்சங்கங்கள் 25 ந் தேதிக்கு முன்பாக கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கெடு விதித்தனர். அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் நோட்டீஸ் வழங்கியபடி போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.