புதுச்சேரியில் புதிய அரசு அமைக்க என்.ஆர்.காங்- அதிமுக தயக்கம்- 7-வது முறையாக ஜனாதிபதி ஆட்சி?
புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய அரசு அமைக்க என்.ஆர். காங்கிரஸ்- அதிமுக தயக்கம் காட்டி வருகிறது. இதனால் புதுவையில் 7-வது முறையாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
புதுச்சேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 5 பேரும் திமுகவை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏவும் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதனையடுத்து புதுச்சேரி சட்டசபையில் முதல்வராக இருந்த நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை.
இதனால் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து 14 எம்.எல்.ஏக்களைக் கொண்ட எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்குமா? என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. இது தொடர்பாக பாஜகவினருடன் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஆலோசனை நடத்தி இருந்தார்.
புதிய அரசு இல்லை?
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளரும். சட்டமன்ற அதிமுக கட்சி தலைவருமான அன்பழகன், அடுத்த 10 நாட்களில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. அதனால் புதிய ஆட்சி அமைப்பதில் நாங்கள் ஆர்வம் காட்டவில்லை என்றார். மேலும் அதிமுகவிற்கு குறுக்குவழியில் ஆட்சி அமைக்க விருப்பமில்லை. அப்படி இருந்திருந்தால் எப்பொழுதோ ஆட்சி அமைத்து இருப்போம் எனவும் கூறினார்.
தேர்தல் தேதி அறிவிப்பால் தயக்கம்
என்.ஆர்.காங்கிரஸ்-அதிமுக - பாஜகவின் 3 நியமன எம்.எல்.ஏக்கள் சேர்ந்து புதிய ஆட்சிக்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் அன்பழகன் கூறுவதைப் போல 10 நாட்களுக்குதான் புதிய அரசு இருக்க முடியும்; அதன்பின்னர் காபந்து அரசாகத்தான் செயல்படும் என்கிற நிலை உள்ளது. இதனால் என்.ஆர். ரங்கசாமியும் புதிய அரசு அமைப்பதில் ஈடுபாடு காட்டவில்லை என கூறப்படுகிறது.
ஜனாதிபதி ஆட்சி
புதுச்சேரியில் மீண்டும் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த சாத்தியங்கள் உள்ளன. புதுச்சேரியில் தற்போது ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டால் இது 7-வது முறையாக இருக்கும்.
7-வது முறையாக ஜனாதிபதி ஆட்சி
1968, 1974-ல் 2 முறை, 1978, 1980, 1990 என ஏற்கனவே 6 முறை ஜனாதிபதி ஆட்சி புதுவையில் அமலில் இருந்தது. 1974-ம் ஆண்டு முதல் 1977- ம் ஆண்டு வரை 3 ஆண்டுகள் புதுவையில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.