வேட்பாளருக்காக அலைந்த ரங்கசாமி... கடைசி நேரத்தில் சிக்கிய புவனா.. என். ஆர்.காங். ஒரு கேள்விக்குறி!
புதுச்சேரி: வழக்கம்போல் வேட்பாளரை தேடி அலைந்துள்ளார் ரங்கசாமி... கடைசி நேரத்தில் ஒருவரை கொண்டு வந்து காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கட்சியினருக்கும், ஊடகங்களுக்கும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது, வேட்பு மனு தாக்கலின்போதுதான் தெரிந்தது.. ரங்கா இதுபோல செய்வது இது முதல் முறையல்ல என்பதால் யாரும் அதிர்ச்சி ஆகவில்லை.. மாறாக அட போங்கப்பா.. எப்பப் பார்த்தாலும் இதே வேலையாப் போச்சு இவருக்கு என்று அங்கலாய்த்துக் கொண்டனர்.
புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை வரை நாம் தமிழர் கட்சி, சோஷியலிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 3 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
காங்கிரஸ் ஜான் குமார்
இந்நிலையில் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான இன்று காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார், என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனா என்கிற புவனேஸ்வரன் மற்றும் மக்கள் முன்னேற்றக் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிச்செல்வன் ஆகியோர் தங்களது வேட்பு மனுக்களை சுற்றுலாத்துறை இயக்குனரும் தேர்தல் துறை அதிகாரியுமான மன்சூரிடம் தாக்கல் செய்தனர்.
காங். ஊர்வலம்
காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார், காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து பேரணியாக வந்தார். அவருடன் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் மற்றும் திமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் மற்றும் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ரங்காவின் அலைச்சல்
இதனிடையே அதிமுக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி சார்பில் காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிடக்கூடிய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளர் யார் என்பது வேட்பு மனு தாக்குதல் முடிவடைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் தெரிந்தது. இதற்கு காரணம் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிவதற்காக தயார் நிலையில் இருந்த அக்கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நேரு ரங்கசாமியின் மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக போட்டியில் இருந்து நேற்று விலகிவிட்டார். இதனால் வேட்பாளர் கிடைக்காமல் நேற்று இரவு முழுவதும் வேட்பாளரை தேடி அலைந்துள்ளார் ரங்கசாமி.
யாரும் முன்வரவில்லை
கட்சியின் மீதுள்ள அதிருப்தியின் காரணமாக யாரும் போட்டியிட விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது. இறுதியாக இன்று வேட்பு மனு தாக்கலிக்கான இறுதி நேரம் நெருங்கி கொண்டிருந்த வேலையில், கட்சியில் பிரபலமில்லாத தொழிலதிபர் புவனே என்கிற புவனேஸ்வரன் என்பவரை வேட்பாளராக தேர்வு செய்துள்ளார் ரங்கசாமி. வேட்பாளரை அவசர அவசரமாக கோவிலுக்கு அழைத்து சென்று பூஜை செய்த ரங்கசாமி, இறுதியாக வேட்பு மனு தாக்கல் முடிவடைய சில மணி நேரங்களுக்கு முன்னர் வேட்பாளர் புவனேஸ்வரனை அழைத்து வந்து வேட்பு மனு தாக்கல் செய்ய வைத்தார். அப்போதுதான் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி காரர்களுக்கே வேட்பாளர் இவர்தான் என்பது தெரிந்தது.
இப்படித்தான் எப்பவுமே
ரங்கசாமி இதுபோன்று நடந்து கொள்வது இது ஒன்று புதிதல்ல. ஏற்கனவே கடந்த முறை நடைபெற்ற தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தனது சொந்த அக்காள் மகன் நெடுஞ்செழியனை அழைத்து வைந்து யாருக்கும் தெரியாமல் இறுதி நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வைத்தார். ரங்கசாமியின் இந்த தன்னிச்சையான முடிவுகளால் கட்சியின் நிர்வாகிகள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை ரங்கசாமி மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. காமராஜர் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 6 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
புவனாவை கடைசி நேரத்தில் கொண்டு வந்த.. ரங்கசாமி ஒரு கேள்விக்குறி.. அடுத்து யாராச்சும் படம் எடுத்தா இப்படி டைட்டில் வைங்கப்பா!