ஆம்புலன்சும் காரும் பயங்கர மோதல்.. ஒருவர் பலி.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
புதுச்சேரி: புதுச்சேரி அருகே ஆம்புலன்சும் - காரும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
Recommended Video
கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது தந்தை மணி, மனைவி தனபாக்கியம் ஆகியோர் ஆம்புலன்ஸ் மூலம் பாலமுருகனை ஏற்றிகொண்டு, புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது புதுச்சேரி கிருமாம்பாக்கம் காவல்நிலையம் அருகே ஆம்புலன்ஸ் வந்தபோது, புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற தமிழக அரசு காருடன் ஆம்புலன்ஸ் நேருக்கு நேர் மோதியது. இதில் ஆம்புலன்ஸ் தூக்கி வீசப்பட்டது.
இந்த சம்பவத்தில் மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர்கள் அனைவரும் படுகாயமடைந்தனர். உடனே அருகில் உள்ள இருந்த காவலர்கள் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு, அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளது.