கிரண்பேடி தான் அவர் டார்கெட்.. எவ்ளோ சொல்லியும் கேட்கல - நமச்சிவாயம் ஓபன் ஸ்டேட்மென்ட்
புதுச்சேரி: அரசின் நிர்வாகி சீர்கேட்டை சரி செய்யாமல் துணைநிலை ஆளுநர் மீது குறை கூறி ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சரை கண்டித்து சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக நமச்சிவாயம் பேட்டி அளித்துள்ளார்.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியில் இருந்த அமைச்சர் நமச்சிவாயம், கடந்த 2 தினங்களாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். இந்நிலையில், இன்று சட்டப்பேரவைக்கு வந்த நமச்சிவாயம் தனது சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சபாநாயகர் சிவகொழுந்துவிடம் அளித்தார். நமச்சிவாயத்துடன் ஊசுடு தொகுதியின் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை தீபாய்ந்தான் வழங்கினார்.

சிந்தனை இல்லாத முதல்வர்
ராஜினாமா கடிதத்தை அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நமச்சிவாயம், அரசின் நிர்வாக சீர்கேட்டை சரிசெய்யாத முதலமைச்சர் நாராயணசாமியை கண்டித்து இரண்டு பேரும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்தார்.
துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை எதிர்க்கும் பணியில் தான் முதலமைச்சரின் கவனம் முழுமையாக இருந்ததாக தெரிவித்த நமச்சிவாயம், மாநில மக்கள், வளர்ச்சி மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது முதலமைச்சருக்கு சிந்தனை இல்லாதது குறித்து கட்சி தலைமையிடம் பல முறை முறையிட்டும் கேட்காத காரணத்தால் பதவிகளை ராஜினாமா செய்தோம் என்றார்.
மேலும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் பேசி கருத்துக்களை கேட்டு முடிவு செய்வோம். கட்சி பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு ஏற்கனவே அனுப்பி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அடுத்தக் கட்ட நடவடிக்கை
இதனிடையே ராஜினாமா செய்ததற்கான கடிதத்தை பெற்றுக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் சிவக்கொழுந்து, 'நமச்சிவாயம் மற்றும் தீபாய்ந்தான் ஆகிய இருவரும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கொடுத்துள்ளனர். அதனை தற்போது பெற்றுக்கொண்டுள்ளோம். இந்த கடிதத்தை சட்டப்பேரவை செயலருக்கு அனுப்பி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும்' என்றார்.