முதல் ஆளாக.. களத்தில் குதித்தார் ரங்கசாமி.. அந்தப் பக்கம் மோதப் போவது யாரப்பா??
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா தொகுதியில் தங்களது கட்சி போட்டியிடும் என்று அகில இந்திய என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதனால் காங்கிரஸ் கூட்டணி சார்பில் யார் போட்டியிடப் போவது யார் என்ற பரபரப்பு இப்போதே கிளம்பி விட்டது.
30 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட புதுச்சேரி மாநிலத்தில் ஒரே ஒரு மக்களவை தொகுதி உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்று என்.ஆர்.காங்கிரஸ் என்ற தனிக்கட்சி ஆரம்பித்த ரங்கசாமியின் கட்சி வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று தற்போது மக்களவை உறுப்பினராக உள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரையில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தற்போது ஆளும் கட்சியான காங்கிரஸிற்கும், எதிர்கட்சியான என்.ஆர்.காங்கிரஸிற்கும் இடையேதான் நேரடிப் போட்டி.
போட்டியில் நான்கு பேர்
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில், தற்போது சபாநாயகராக உள்ள வைத்தியலிங்கம், முதலமைச்சர் நாராயணசாமி, முன்னாள் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் மற்றும் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் ஆகிய நான்கு பேரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காங்கிரஸின் கூட்டணி கட்சியான திமுகவும் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியை கேட்டு வருவதாகவும் தெரிகிறது.
களத்தில் குதித்தது என்.ஆர். காங்கிரஸ்
இதனிடையே பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸை பொறுத்தவரையில் பாஜகவுடன் கூட்டணி வைத்து, பாஜக வேட்பாளரை நிறுத்தலாம் என கடந்த சில நாட்களவே புதுச்சேரியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரே போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
அதிரடி அறிவிப்பு
என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆரம்பித்து 9 ஆண்டு விழா இன்று கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் கட்சியின் நிறுவனரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான ரங்கசாமி கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அப்போதுதான் தனது கட்சியே போட்டியிடும் என தெரிவித்தார் ரங்கசாமி.
மீண்டும் வெல்வோம்
செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி, கடந்த பாராளுமன்ற தேர்தலை போல் வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் இணைந்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்றும், கடந்தமுறை போல் இந்த முறையும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட்டு வெற்றி பெறுவார் என தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடியின் தம்பிதான் ரங்கசாமி என நாராயணசாமி கூறியுள்ளதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும், அவர் கூறியது உண்மைதான் என தெரிவித்தார்.
குறை கூறிக் கொண்டே இருக்கிறார்
தொடர்ந்து பேசிய அவர், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி மக்களுக்காக தொடர்ந்து பாடுபடும். ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பதை நன்கு அறிந்தவர்தான் தற்போதைய முதல்வர் நாராயணசாமி என்றும், ஆனால் போட்டி போட்டுக்கொண்டு ஆளுநர் தடையாக இருப்பதாக கூறி எந்த திட்டங்களையும் செய்யவில்லை என்றும், புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை. எதற்கெடித்தாலும் ஆளுநரை குறை கூறி காலத்தை கழித்து வருகின்றது இந்த அரசு. இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பில் எந்த முன்னேற்றமும் இந்த ஆட்சியில் இல்லை என கூறினார். மேலும் ஆளுநரையே குறை கூறி இலவச அரிசி, பொங்கல் பரிசுகள் வழங்காதது ஆட்சியாளர்களின் இயலாமையை காட்டுவதாக ரங்கசாமி குற்றாம்சாட்டினார்.
காங்கிரஸில் யாரு
ரங்கசாமியின் இந்த அறிவிப்பு மூலம் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. ஆளும் காங்கிரஸ் கட்சியும் இன்னும் ஓரிரு வாரங்களில் தங்களுடைய வேட்பாளர் யார் என்பதை தெரிவிப்பதற்கு வாய்ப்புள்ளதால், புதுச்சேரி அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.