எல்லாருக்கும் அரிசி.. சட்டசபை கதவை பூட்டி எதிர்கட்சி எம்எல்ஏக்கள் தர்ணா.. புதுச்சேரியில் பரபரப்பு
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச அரிசி வழங்க வலியுறுத்தி அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட ஒட்டுமொத்த எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டப்பேரவை வாயில் கதவுகளை பூட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையில் ஏழை மக்கள் வருமானமின்றி தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில், சிவப்புநிற ரேஷன் கார்டு வைத்திருக்கும் நபர்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் ஒன்றுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் கார்டு ஒன்றுக்கு ஒரு கிலோ பருப்பு ஆகியவற்றை வழங்க மத்திய அரசு அறிவித்துள்ளது. நிவாரண உதவியாக 3 மாதங்களுக்குரிய பொருட்களை ஒரே தவணையில் வழங்க திட்டமிடப்பட்டது.
அதன்படி புதுச்சேரியில் உள்ள 1.78 லட்சம் சிவப்பு நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. எனினும், ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருவதால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு தரப்பினருக்கு மட்டும் நிவாரண உதவிகள் வழங்குவது பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதால், மஞ்சள் நிற ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் அரிசி உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்க வேண்டுமென என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே மத்திய அரசின் மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச அரிசி, கோதுமை வழங்கப்படுவதுபோல், வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ள பாதிக்கப்பட்ட மஞ்சள் ரேஷன்கார்டுதாரர்களுக்கும் இலவச அரிசி வழங்க வேண்டுமென முதலமைச்சர் நாராயணசாமி, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், கடிதம் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்.
இந்நிலையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச அரிசி வழங்க வலியுறுத்தி அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட ஒட்டுமொத்த எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டப்பேரவை வாயில் கதவுகளை பூட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி மாநிலத்தில் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மத்திய அரசு அனுப்பிய அரிசி மற்றும் பருப்புகளை, பயனாளிகளுக்கு மாநில அரசு முறையாக விநியோகம் செய்யவில்லை என குற்றம்ச்சாட்டியும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக அரிசி வழங்க வலியுறுத்தியும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜெயபால், சுகுமார், செல்வம், பாஜக சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் உள்ளிட்ட ஒட்டுமொத்த எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும், அரசுக்கு எதிராக பதாகைகளை கையில் ஏந்தியவாறு திடீரென சட்டமன்ற வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், 2 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டும், முதலமைச்சர் நாராயணசாமி பேச்சுவார்த்தை நடத்தாததை கண்டித்து, எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையின் இரு நுழைவு வாயில்களையும் பூட்டி யாரும் வெளியில் செல்ல முடியாத வகையில் அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் மோதல் போக்கினால் மக்களுக்கு சேர வேண்டிய நலத்திட்ட உதவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினர்.