புதுச்சேரி சபாநாயகராகிறார் சிவக்கொழுந்து.. துணை சபாநாயகராகிறார் பாலன்!
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் சபாநாயகர் தேர்தலில் துணை சபாநாயகர் சிவகொழுந்து போட்டியிடுகிறார்.
புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு புதுச்சேரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து மார்ச் மாதம் 22 ஆம் தேதி முதல் சபாநாயகர் பதவி காலியாக இருந்தது.
இந்நிலையில் புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்காக புதுச்சேரி சட்டப்பேரவை நாளை கூடும் என சட்டப்பேரவை செயலாளர் வின்சென்ட் ராயர் அறிவித்திருந்தார். இந்நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சியான திமுக சார்பில் சபாநாயகர் தேர்தல் குறித்து ஆலோசனைக்கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் திமுக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து சபாநாயகர் பதவிக்கு தற்போதைய துணை சபாநாயகர் சிவக்கொழுந்துவின் பெயரை முன்மொழியப்பட்டு சட்டப்பேரவை செயலாளர் வின்சென்ட் ராயரிடம் மனு தாக்கல் செய்யப்பட்டது. வேட்பு மனு தாக்கலுக்கான நேரம் இன்று நண்பகல் 12 மணியுடன் முடிவடைந்தது. அதுவரை எதிர்கட்சிகள் சார்பில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
இதன் காரணமாக ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் சபாநாயகர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ள சிவக்கொழுந்து சபாநாயகராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார். மேலும் துணை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் உழவர்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாலன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாளை நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தை என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். விடுமுறை நாட்களில் அறிவிப்பு வெளியிட்டதால் வெளியூர் சென்றுள்ள எம்.எல்.ஏக்கள் வர இயலாது எனக்கூறியும், சபாநாயகர் தேர்தலுக்கு கால நீட்டிப்பு தர வலியுறுத்தியும், என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக மற்றும் பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்கட்சி நிர்வாகிகள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் மனு அளிக்க ராஜ்நிவாஸ் சென்றனர்.
ஆளுநர் கிரண்பேடி டெல்லி சென்றுள்ளதால் தங்களது கோரிக்கை மனுவை ஆளுநரின் செயலரிடம் அளித்துள்ளனர். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி சட்டப்பேரவை செயலாளர் வின்சென்ட் ராயரிடமும் மனு அளித்துள்ளனர்.