வெள்ளைச் சிறகு விரித்து.. வண்ண வண்ணப் பூக்களாய்.. வானில் விரிந்து பறந்து.. ஊசுட்டேரிக்கு போலாமா?
புதுச்சேரி: புதுச்சேரியில் கோடை விடுமுறை களை கட்டியுள்ளது.. இருக்காதே பின்னே... சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது புதுச்சேரியில் உள்ள ஊசுட்டேரி பறவைகள் சரணாலயம்.
ஊசுட்டேரி பறவைகள் சரணாலயத்தில் 29 வெளிநாட்டு பறவையினங்கள் உள்பட 100 க்கும் மேற்பட்ட பறவையினங்களை காண்பதற்காக சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சுற்றுலா நகரமான புதுச்சேரியில் சிறந்த சுற்றுலாதளமாக விளங்கி வருகிறது ஊசுட்டேரி பறவைகள் சரணாலயம். சுமார் 390 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த ஊசுட்டேரியில் ஆண்டு முழுவதும், நீர் வற்றாமல் நிரம்பி உள்ளதால், பறவைகள் இனபெருக்கம் செய்ய ஏற்ற சூழல் இங்கு அமைந்துள்ளது.
ஊருவிட்டு ஊரு போய் அடுத்தவர் குலதெய்வ கோவிலில் அத்துமீறி மயானபூஜை.. நள்ளிரவில் பொதுமக்கள் ஆவேசம்!
29 வகை பறவைகள்
இதன் காரணமாக ரஷ்யா, மத்திய ஆசியா, இலங்கை, மியான்மர், வங்கதேசம், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து 29 வகை வெளிநாட்டு பறவையிணங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வகையான உள்நாட்டு பறவையிணங்கள் இங்கு வந்து குவிகின்றன. குறிப்பாக இந்த கோடையில் பிளம்மிங்கோ, பெளிகான், பெயின்டர் ஸ்டோர்க், பைடு கிங் பிஷர் போன்ற வெளிநாட்டு பறவைகள் அதிகளவில் ஊசுட்டேரியில் குவிந்துள்ளன.
ஏரிகள், தீவுகள்
ஊசுட்டேரிக்கு வரும் பறவைகள் அங்குள்ள தீவுகள் மற்றும் ஏரிக்கரைகளில் உள்ள மரங்களில் கூடு கட்டி குஞ்சு பொரிக்கின்றன. ஆண்டு முழுவதும் ஊசுட்டேரியில் பறவைகள் நிறைந்து காணப்படுவதால், பல்வேறு அறிய வகை பறவைகளை காண்பதற்காக உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் அதிகளவு இங்கு வந்து செல்கின்றனர்.
படகு சவாரியும் உண்டு
குறிப்பாக இந்த கோடை விடுமுறையை குடும்பத்தோடு சேர்ந்து கொண்டாடுவதற்கு ஊசுட்டேரி பறவைகள் சரணாலயம் சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. மேலும் புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை சார்பில் இங்கு படகு சவாரியும் நடத்தப்பட்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகள் ஏரியில் படகில் சவாரி செய்தவாரே பறைவைகளுக்கு அருகிலேயே சென்று அவை செய்யும் சின்னஞ்சிறு சேட்டைகளையும் கண்டு ரசிக்க முடியும்.
கூட்டமாக வரும் பறவைகள்
மேலும் பறவைகள் கூட்டமாக இருக்கும் இடத்தில் படகு சிறிது நேரம் நிறுத்தப்பட்டு அவை எழுப்பும் இனிமையான சத்தங்களையும் நம்மால் கேட்க முடியும். ஊசுட்டேரியில் மெதுவாக இயக்கப்படும் இந்த படகுகளில் அமர்ந்தவாறு பறவைகளின் அழகை பக்கத்திலிருந்து பார்த்து ரசிப்பது மனதிற்கு இதமாக இருப்பதாக சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி பொங்க கூறுகின்றனர்.
வழுதாவூர் சாலை
புதுச்சேரியில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் வழுதாவூர் சாலையில் உள்ளது இந்த ஊசுட்டேரி பறவைகள் சரணாலயம். புதுச்சேரியிலிருந்து திருக்கனூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கே நின்று செல்லும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி உண்டு. 15 நிமிட படகு சவாரிக்கு 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ரூ.60ம், பெரியவர்களுக்கு ரூ.100ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.