சிறப்பு ரயிலில் புறப்பட்ட 1,168 வெளிமாநில தொழிலாளர்கள்.. செலவை ஏற்றது புதுச்சேரி அரசு
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் சிக்கித் தவித்த வெளிமாநில தொழிலாளர்கள் 1,168 பேர் சிறப்பு ரயில் மூலம் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் குறையாததால் 4 வது கட்டமாக ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் வேலை, கல்வி, சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்காக ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு சென்றவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து வந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் அதிகளவில் தவித்து வருகின்றனர்.
இதற்கிடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் மாநிலத்துக்கு செல்லலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. புதுச்சேரி அரசும் தனியாக http://welcomeback.py.gov.in இணையதளம் தொடங்கி அவர்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.
நாளை முதல் அரசு ஊழியர்கள் சொந்த செலவில் பணிக்கு வர வேண்டும்.. தமிழக அரசு உத்தரவு
சொந்த மாநிலம் செல்ல
மேலும் இதுவரை கல்வி, வேலை, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக புதுச்சேரியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு சென்று கொரோனா ஊரடங்கால் சிக்கி தவித்து வந்த புதுச்சேரியை சேர்ந்த 107 பேரை மாநில அரசு புதுச்சேரிக்கு கொண்டுவந்துள்ளது. அதேபோல் புதுச்சேரியில் இருந்த 424 பேர் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஊருக்கு செல்ல முடியவில்லை
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் சேதராப்பட்டு, திருபுவனை, திருவாண்டார்கோவில், பத்துகண்ணு, மேட்டுப்பாளையம், கன்னியக்கோவில், காரைக்கால்
உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதில் உள்ளூர் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த பல ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா ஊரடங்கினால், தொழிற்சாலைகள் கடந்த 53 நாட்களாக மூடப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில தொழிற்சாலைகளில் குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களை கொண்டு இயங்கி வருகின்றன. இதானல் இங்கு பணியாற்றி வந்த ஏழை தொழிலாளர்கள், தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இதுகுறித்து அவர் மாநில அரசிடம் முறையிட்டனர்.
பீகார் உபி மாநிலத்தவர்
அதனையொட்டி வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்ப புதுச்சேரி அரசு ஏற்பாடு செய்தது. அதன்படி இன்று அதிகாலை புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து விழுப்புரம், சென்னை வழியாக பீகார் மற்றும் உத்தரபிர தேசம் மாநிலத்திற்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில், வெளிமாநில தொழிலாளர்கள் 1,168 பேர் புறப்பட்டு சென்றனர். அவர்களை புதுச்சேரி ரெயில் நிலையத்தில் இருந்து முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் அருண் ஆகியோர் கொடியசைத்து வழியனுப்பி வைத்தனர். முன்னதாக புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து அனைவரையும் மாவட்ட நிர்வாகம் அரசு பேருந்து மூலம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்திற்கு அழைத்து வந்து மருத்துவ பரிசோதனை செய்தது.
அரசே செலவை ஏற்றது
இதுகுறித்து முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில், புதுச்சேரியில் இருந்து 813, காரைக்காலில் இருந்து 355 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள் உத்திரபிரதேசம், பீகாருக்கு சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்காக முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.14 லட்சம் ரயில் கட்டணம், உணவுக்காக கொடுத்துள்ளோம்.
புதுச்சேரி வரும் 1100 பேர்
இதேபோல் மேற்கு வங்காளம், அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இன்னும் ஒருவாரத்தில் செல்ல ஏற்பாடு செய்து வருகிறோம். ஜம்மு காஷ்மீர் தொழிலாளர்கள், மாணவர்கள் சென்னையில் இருந்து அனுப்பி வைக்க அம்மாநில நிர்வாகத்தின் அனுமதியை கேட்டுள்ளோம். அவர்கள் அனுமதி கொடுத்தவுடன் அனுப்பி வைக்கப்படுவார்கள்.
அதேபோல் வெளிமாநிலங்களில் உள்ள புதுச்சேரியை சேர்ந்த 1,100 பேரும், பிரான்ஸ், சிங்கபூர், மலேசியா, சவுதி அரேபியா போன்ற வெளி நாடுகளில் இருப்பவர்களையும் நம்முடைய மாநிலத்துக்கு அழைத்துவர வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்றார்.