ரோட்டில் சென்ற 30-க்கும் மேற்பட்டவர்களை கடித்து குதறிய வெறிநாய்.. புதுவையில் பரபரப்பு
Recommended Video
புதுவை: புதுச்சேரியில் 30-க்கும் மேற்பட்டவர்களை வெறிநாய் ஒன்று கடித்து குதறிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே வீதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
புதுச்சேரியை அருகே சூரமங்கலம் கிராமத்தில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த ஒருவரை வெறிநாய் ஒன்று கடித்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த நாயை விரட்டியபோது, சாலையில் சென்றுகொண்டிருந்த 30-க்கும் மேற்பட்டோரை அந்த நாய் துரத்தி துரத்தி கடித்து குதறியுள்ளது.
இதனால் சாலையில் சென்றவர்கள் நாலாபுறமும் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். பலரை கடித்து குதறிய அந்த நாய் மொளப்பாக்கம், நெட்டப்பாக்கம் கிராமத்திற்கு சென்றது. அங்கும் சிலரை கடித்து குதறியுள்ளது. நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருகிலிருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாய் கடிக்கு போதிய மருந்துகள் இருப்பில் இல்லாததால் பாதிக்கப்பட்ட அனைவரும் புதுச்சேரியிலுள்ள தலைமை அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், தங்கள் பகுதியில் அதிகமாக நாய் தொல்லை இருப்பதாக கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை
அதிகாரிகள் முறையாக நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சம்பவம் நடைபெற்றிருக்காது. உடனடியக தெருவில் வெறி பிடித்து சுற்றி வரும் நாய்களை பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். ஒரே நேரத்தில் ஒரு நாய் 30-க்கும் மேற்பட்டோரை கடித்த குதறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையயே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.