ஒரு பங்சுவாலிட்டி இல்ல.. எம்பிக்கள் குழுவை கதறவிட்ட புதுச்சேரி தலைமை செயலாளர்!
புதுச்சேரி: புதுச்சேரி தலைமைச் செயலாளர், ஜஜி ஆகியோர் வராததால், பழங்குடியின மக்கள் நலன் பற்றி ஆய்வு செய்யும் எம்பிக்கள் குழுவினர் பாதியிலேயே ஆலோசனை கூட்டத்தை முடித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் நலன் பற்றி ஆய்வு செய்யும் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் 11 பேர் அடங்கிய குழு புதுச்சேரிக்கு வந்துள்ளனர்.
இவர்கள் கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் முகாமிட்டு, புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரடியாக சென்று, அரசு சார்பில் அந்த மக்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், அவர்களுடைய வாழ்வாதாரம், அவர்களுக்கு தேவையான புதிய திட்டங்கள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் ஆய்வின் அடிப்படையில், புதுச்சேரி மாநில தலைமை செயலாளர் அஸ்வனி குமார், அரசு செயலர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்திற்கு நாடாளுமன்ற எஸ்சி, எஸ்டி குழு தலைவர் டாக்டர் கிரித் சோலங்கி தலைமை வகித்தார்.
புதுச்சேரி அரசு செயலர்கள் அன்பரசு, பத்மா ஜெய்ஸ்வால், ஆலிஸ்வாஸ் , அசோக்குமார், பிரசாந்த்குமார் பாண்டா, அருண், மகேஷ், பிசிஆர் பிரிவு எஸ்பி பாலகிருஷ்ணன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் ரகுநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டம் தொடங்கியபோது குழு தலைவர் டாக்டர் கிரித் சோலங்கி, மாநிலத்தின் தலைமைச் செயலாளர், போலீஸ் ஐஜி ஏன் கூட்டத்திற்கு வரவில்லை என்று கேள்வி எழுப்பினார். அதோடு அவர் விட்டுவிடாமல், உங்கள் மாநிலத்தின் நலனுக்காக மத்தியில் இருந்து எம்பிக்கள் குழு நாங்க வந்துள்ளோம்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டத்தில் கூட தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க மாட்டார்களா? என தொடர்ந்து சராமாரியாக கேள்விகளை எழுப்பிகொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் தலைமை செயலாளர் வராததால் கோபமடைந்து கூட்டத்தை பாதியில் முடித்துவிட்டு, கூட்ட அரங்கிலிருந்து வெளியேறினார்.
இதையடுத்து அரசு செயலர்கள் தலைமைச் செயலருக்கும், போலீஸ் ஜஜிக்கும் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து ஜஜி சுரேந்திர சிங் யாதவ் அங்கு உடனடியாக வந்தார். இதனைதொடர்ந்து எம்பிக்கள் குழுவை அதிகாரிகள் சமரசம் செய்ய முயன்றனர். ஆனால், அக்குழுவினர் ஏற்கவில்லை. இதனால் கூட்டம் நடைபெறாமல் ரத்தானது.