மக்களுக்கு வேண்டியதை செஞ்சுட்டோம்.. பட்ஜெட் குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி
புதுச்சேரி: இடைக்கால பட்ஜெட்டில் மக்களின் கோரிக்கைகள் முழுவதும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 5 லட்சம் வரை வருமானவரி விலக்கு, மீன்வளத்துறைக்கு என தனி அமைச்சகம் என பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
அமெரிக்காவில் அருண் ஜெட்லி சிகிச்சையில் இருந்ததால் தற்காலிக நிதி அமைச்சராக பியூஷ் கோயல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். எதிர்க் கட்சிகளிடம் இருந்து கலவையான விமர்சனங்கள் பட்ஜெட்டுக்கு கிடைத்துள்ள. தேர்தலை மனதில் கொண்டது இந்த பட்ஜெட் என்றும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.
செய்தியாளர்களுக்கு பேட்டி
இந் நிலையில் புதுச்சேரியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:மக்கள் மனதை வைத்து தயாரிக்கப்பட்ட பட்ஜெட்.
பயனளிக்கும் பட்ஜெட்
அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கக்கூடிய பட்ஜெட். அவர்களின் கோரிக்கைகள் எல்லாம் இதில் நிறைவேறி இருக்கின்றன. மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு விட்டதால் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கூட்டணி அதிகாரம்
லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து பேசுவதற்கு எனக்கு அதிகாரம் இல்லை. ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு என்ற குற்றச்சாட்டு என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு.
எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டு
இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பல முறை விளக்கம் அளிக்கப்பட்டு விட்டது. ரபேல் விவகாரத்தில் தூங்குவது போன்று எதிர்க்கட்சிகள் நடிக்கின்றன என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.