ஆசை ஆசையாய் இருக்கிறதே.. இதுபோல் பார்த்திடவே.. ஒரே கல்லில் தத்ரூபமாக வன உயிரின சிற்பங்கள்
புதுச்சேரி: வனப்பகுதியில் வாழும் உயிரினங்களை ஒரே கல்லில் சிற்பங்களாக செய்து, அவற்றை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது புதுச்சேரியைச் சேர்ந்த தொண்டு நிறுவனம். இந்த சிற்பங்களும் ஓவியங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
புதுச்சேரியில் யுனிவர்சல் எக்கோ பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த வனப்பகுதியில் வாழக்கூடிய பல்லுயிர்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த முயற்சிகளை கையாண்டு வருகிறது.
இதன்படி வனப்பகுதியில் வாழும் உயிரினங்களை பாதுகாக்கவும் ஒரே கல்லில் பல்வேறு உயிரினங்களின் உருவங்களை சிற்பங்களாக வடிவமைத்துள்ளது.
சரணாலயங்களில் சிற்பங்கள்
இவற்றை ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுடன் இணைந்து அங்குள்ள சரணாலயங்கள், பூங்காக்கள், அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காட்சிப்படுத்தி வருகிறது அவ்வாறு காட்சிப்படுத்தப்படும் இவர்களது சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் மக்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது.
தத்ரூபமாக விலங்குகள்
கிராணைட் மற்றும் கடப்பா கற்களை கொண்டு ஒரே கல்லிலான சிற்பங்கள் உருவாக்கி வருகின்றனர். அவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள பச்சோந்தி, தேவாங்கு , பாம்பு, அணில், கடல் ஆமை, வண்டு இனங்கள் மற்றும் பறவை இனங்கள் அனைத்தும் தத்துரூபமாக காட்சியப்பளிக்கின்றன.அத்துடன், காண்போர் கண்களுக்கு விருந்தாக அமைந்து வருகிறது.
அழிவில் உள்ள விலங்குகள்
அழிவின் விளிம்பிலுள்ள உயிரினங்களான நீலகிரி வரையாடு, புள்ளி வாத்து, நட்சத்திர ஆமை போன்றவைகள் அதன் குறிப்பிட்ட உடல் அளவுகளிலேயே பெரோ சிமெண்ட் மூலம் உருவாக்கப்பட்டு காட்சிபடுத்தப்படுகின்றன.
பாம்பு- முயல்- வெட்டுக்கிளி
புதுச்சேரி சட்டபேரவை எதிரே உள்ள பாரதி பூங்கா மற்றும் முருங்கப்பாக்கம் பகுதியில் உள்ள கலை மற்றும் கைவினை கிராமத்தில் இவர்களது கைவண்ணங்கள் ஜொலிக்கின்றன. அங்கு சுற்றுலா பயணிகளையும், குழந்தைகளையும் கவரும் விதமாக ஒரே கல்லில் பாம்பு, முயல், பச்சோந்தி, மயில், பூரான், மண் புழு, வெட்டுக்கிளி போன்ற வன விலங்குகளை செதுக்கி உள்ளனர். அந்த உருவங்களை பொது மக்களின் பார்வைக்காகவும், பூங்காவை அழகு படுத்தும் விதமாக வைத்துள்ளார்கள்.
அழகு தமிழில் அறிவியல் பெயர்கள்
இதனை சுற்றுலா பயணிகள் அருகில் நின்று தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து செல்கின்றனர். பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள வன விலங்கு சிற்பங்கள் அனைத்தும் வனப்பகுதிக்கே நேரில் சென்று பார்ப்பது போன்று உள்ளதாக சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். மேலும் விலங்குகள் மற்றும் பறவைகளின் பெயர்கள் தமிழ், ஆங்கிலத்தில் அறிவியல் பெயர்களுடன் அதன் அருகிலேயே குறிப்பிட்டிருப்பது கூடுதல் சிறப்பு.
புதுச்சேரி அரசு அமைத்த கிராமம்
முருங்கபாக்கம் பகுதியில் புதுச்சேரி அரசின் சுற்றுலா துறை சார்பில் கலை மற்றும் கைவினை கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்லுயிர்கள் குறித்த விழிப்புணர்வையும், வனவிலங்குகளை பாதுகாப்பது குறித்தும்
எக்கோ பவுண்டேஷன் இயக்குனர் புபேஷ் குப்தா, பயிற்சியையும் அளித்து வருகிறார்.