கொரோனா: 2-வது முறையாக புதுவையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. நாளை முதல் அமல்
புதுச்சேரி: கொரோனா தடுப்பு பணிகளுக்காக புதுச்சேரியில் பெட்ரோல், டீசலுக்கு ஒரு சதவீதம் வரி ஏற்கெனவே உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது முறையாக நாளை முதல் வரி கடுமையாக உயர்த்தப்படுகிறது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 2 ரூபாயிலிருந்து 3 ரூபாய் வரை உயருகிறது. இது மூன்று மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்று நிதித்துறை செயலர் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக மத்திய அரசிடம் ரூபாய் 995 கோடி நிதி வழங்க முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியிருந்தார். ஆனால் இதுவரை மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை.
அதனால் சுகாதாரத் துறைக்காக என குறிப்பிட்டு, புதுச்சேரியில் கொரோனா நிதிக்காக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி ஒரு சதவீதம் கடந்த ஏப்ரல் 10ம் தேதி உயர்த்தப்பட்டது. அதன்படி பெட்ரோல் மீதான வரி 22.15 சதவீதமும் டீசல் மீதான வரி 18.15 சதவீதமும் அமலுக்கு வந்திருந்தது.
இச்சூழலில் மீண்டும் பெட்ரோல், டீசல் வரியை புதுச்சேரி அரசு நாளை முதல் உயர்த்துகிறது. புதுச்சேரி காரைக்காலில் பெட்ரோல் மீதான வரி 5.85 சதவீதம் உயர்த்தப்பட்டு 28 சதவீதமாகிறது. டீசல் மீது 3.65 சதவீதம் உயர்த்தப்பட்டு, 21.8 சதவீதமாகிறது.
மாஹேயில் பெட்ரோல் வரி 23.9 சதவீதமாகிறது. இதன் உயர்வு சதவீதம் 1.75 ஆகும். டீசல் மீதான வரி உயர்வில்லை.
ஏனாமில் பெட்ரோல் மீதான வரி 25.7 சதவீதமாகிறது. இதன் உயர்வு சதவீதம் 3.55 ஆகும். டீசல் வரி 20 சதவீதமாகிறது. அதன் உயர்வு 1.85 ஆகும். இவ்வரி உயர்வு 3 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்று உத்தரவில் நிதித்துறை செயலர் சுர்பிர் சிங் தெரிவித்துள்ளார்.
வரி உயர்வினால் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை ,2 ரூபாயிலிருந்து 3 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.