புதுவையில் தற்போதுதான் சுதந்திர காற்று வீசுகிறது... காங்கிரசை கிழித்து தொங்கவிட்ட பிரதமர் மோடி!
புதுச்சேரி: புதுச்சேரி மக்கள் தற்போதுதான் காங்கிரஸ் இல்லாத சுதந்திரத்தை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
நாடு முழுவதும் மக்கள் காங்கிரஸ் கட்சியை புறக்கணித்து வருகின்றனர். மன்னர் பரம்பரைபோல் குடும்ப ஆட்சி முறையை கொண்டதுதான் காங்கிரஸ் என்று பிரதமர் கடுமையாக தாக்கினார்.
புதுச்சேரி முதல்வராக மிக மோசமாக செயல்பட்டவர்தான் நாராயணசாமி. அவர் காங்கிரஸ் தலைவரின்(ராகுல் காந்தி) கால் செருப்பை தூக்குவதில் நிபுணராக இருந்தார் என்றும் மோடி கடுமையாக தாக்கி பேசினார்.
புதுச்சேரியில் பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி- கறுப்பு பலூன்களை பறக்கவிட்டதால் பரபரப்பு- 30 பேர் கைது
காற்று மாறி வீசி வருகிறது
பிரதமர் நரேந்திர மோடி புதுவையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து புதுவை லாஸ்பேட்டை பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:- புதுச்சேரியில் தற்போது காற்று மாறி வீசி வருகிறது. புதுச்சேரி மக்கள் தற்போது காங்கிரஸ் இல்லாத சுதந்திரத்தை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகின்றனர். இங்கு மக்களுக்கான அரசு அமையவில்லை. கடந்த 2016-ல் புதுச்சேரி மக்கள் காங்கிரஸுக்கு நம்பிக்கையுடன் வாக்களித்தனர். ஆனால் 5 ஆண்டுகளில் மக்கள் நம்பிக்கை நிராசையாகிப் போனது.
மக்களிடையே விரோதம் தூண்டுகின்றனர்
புதுச்சேரியில் காங்கிரஸ் மேலிட தலைமையின் அரசுதான் செயல்பட்டது. புதுச்சேரி அரசு மத்திய அரசுடன் ஒத்துழைக்கவில்லை. மத்திய அரசு நிதியை பயன்படுத்தவில்லை. தற்போது இந்த மோசமான காங்கிரஸ் அரசு நிர்வாகத்திடம் இருந்து புதுவை மக்கள் விடுதலை அடைந்துள்ளனர். 2021-ல் மக்கள் சக்தியுடன் இயங்கும் புதிய அரசு புதுச்சேரியில் அமையும். இங்கு காங்கிரஸ் கலாசாரம் என்ன என்பதை 5 ஆண்டுகளாக நீங்கள் பார்த்துவிட்டீர்கள். காங்கிரஸ் பிரித்தாளும் கொள்கையை பயன்படுத்துகிறது. மக்களிடம் பொய்யை சொல்லி பிரித்து ஆட்சி செய்வதுதான் அவர்களின் கலாசாரம். சமூகங்கள், மாநிலங்களிடையே விரோதத்தை தூண்டும் செயலை அவர்கள் செய்து வருகிறார்கள்.
நாராயணசாமி மீது கடும் தாக்கு
மீன்வளத்துறை அமைச்சகத்துக்கு தனி அமைச்சகம் அமைப்போம் என்று அவர்கள் சொல்கின்றனர். மீன்வளத்துறைக்கு ஏற்கனவே தனி அமைச்சகமே இருக்கிறது. இதனை முழுமையாக அவர்கள் மறைத்துவிட்டனர். புதுச்சேரி முதல்வராக மிக மோசமாக செயல்பட்டவர்தான் நாராயணசாமி. அவர் காங்கிரஸ் தலைவரின்(ராகுல் காந்தி) கால் செருப்பை தூக்குவதில் நிபுணராக இருந்தார். ராகுல் காந்தி பயணத்தின் போது பொய்யான தகவலை சொன்னவர்தான் இந்த நாராயணசாமி.
குஜராத் தேர்தலில் 10 மடங்கு வெற்றி
புதுச்சேரியில் பஞ்சாயத்து தேர்தலை காங்கிரஸ் நடத்த மறுத்தது. ஆனால் ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. குஜராத் மாநகராட்சி தேர்தலில் பிற கட்சிகளை விட 10 மடங்கு வெற்றியை பாஜக பெற்றது. ஜனநாயக விரோத காங்கிரஸுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள். பொய்கள் சொல்லுவதில் தங்கம், வெள்ளி பதக்கங்களையும் பெற தகுதியானது என்றால் அது காங்கிரஸ்தான். நாடு முழுவதும் மக்கள் காங்கிரஸ் கட்சியை புறக்கணித்து வருகின்றனர். மன்னர் பரம்பரைபோல் குடும்ப ஆட்சி முறையை கொண்டதுதான் காங்கிரஸ்.
புதுவையை சிறந்த மாநிலமாக மாற்றுவோம்
புதுச்சேரியை மிக சிறந்த மாநிலமாக மாற்ற நாங்கள் விரும்புகிறோம். வர்த்தகம், கல்வி, ஆன்மீக, சுற்றுலா ஆகிய துறைகளின் மையமாக புதுச்சேரியை உருவாக்குவோம் என்பதே என் தேர்தல் அறிக்கையாகும். புதுச்சேரி இளைஞர்களுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆதரவு தரும். கல்விக்கான உள்கட்டமைப்பு திட்டங்களில் மிகவும் கவனம் செலுத்துவோம். கற்றலுக்கான முறையில் மாற்றத்தை கொண்டு வந்ததுதான் புதிய கல்வி கொள்கை. மருத்துவம், பொறியியல் கல்லூரிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதிலும் மருத்துவம், தொழிற்கல்வியை தாய்மொழியில் கற்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
கூட்டுறவு அமைப்புக்கு புத்துயிர்
ஆன்மீக சுற்றுலாவுக்கு அற்புதமான பகுதி புதுச்சேரி. பாஜக ஆட்சியில் நாட்டில் சுற்றுலாதுறை வேகமாக வளர்ந்து வருகிறது. சுற்றுலா துறை வளர்ச்சி மூலம் பொருளாதாரம் மேம்பாடு அடையும். காங்கிரஸ் மேலிட கைப்பாவையாக செயல்பட்ட புதுவை அரசால் கூட்டுறவு அமைப்புகள் பல மூடப்பட்டுள்ளன. இந்த கூட்டுறவு அமைப்புகளுக்கு நாங்கள் புத்துயிர் கொடுப்போம். கடல்சார் துறை, கூட்டுறவு துறை ஆகியவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
எங்களுக்கு வாக்களியுங்கள்
சாகர் மாலா திட்டங்கள் மூலம் மீனவர்களிடையே மாற்றத்தை கொண்டுவர முடியும். மீன்வளத்துறைக்கு 2014-ஐ விட 50% கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். துறைமுக மேம்பாடு, மீனவர்களுக்கு கடனுதவி, நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும். எனவே முன்னேற்றத்துக்கு எதிரியான காங்கிரஸை தேர்தலில் தூக்கி எறிவோம். சட்டசபை தேர்தலில் வளர்ச்சிக்கு எதிரானவர்களை நீங்கள் நிராகரிக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். பாரத் மாதா கீ ஜே! வந்தே மாதரம் என்று கூறி பேசி முடித்தார் பிரதமர் மோடி.