அடுத்தடுத்து விழும் விக்கெட்டுகள்.. 'ஆபரேஷன் பாமக..' அதிர வைக்கும் டிடிவி தினகரன் வியூகம்!
Recommended Video
புதுச்சேரி: பாமகவில் இருந்து விலகிய, அக்கட்சி, மாநில துணைத்தலைவர் பொங்கலூர் மணிகண்டன் இன்று டிடிவி.தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். இதன் பின்னணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 'ஆபரேஷன் பாமக' திட்டம் உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்து லோக்சபா தேர்தலில் போட்டியிட எடுத்த முடிவு, அந்த கட்சிக்கு பெரும் பாதகமாக போய்க்கொண்டு உள்ளது.
கூட்டணி உறுதியான பிறகு, பாமக மாநில துணைத் தலைவர் ரஞ்சித், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்தையும் ராஜினாமா செய்தார்.
ஜெ. வழியில் கட்சி, சின்னம் பிடிச்சாச்சு.. வசைபாடியவர்களை வளைச்சாச்சு.. ஜெ.வழியில் வெல்வாரா எடப்பாடி?
முதல் விக்கெட் ரஞ்சித்
நேற்றுவரை திட்டிய ஒரு கட்சியோடு, பாமக எப்படி கூட்டணி வைக்கலாம் என மனசாட்சி உறுத்தியதால், விலகுவதாக அறிவித்தார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து கொண்டார் ரஞ்சித். இந்த நிலையில்தான், பாமகவின் மற்றொரு துணைத் தலைவரான, பொங்கலூர் மணிகண்டனும் அக்கட்சியிலிருந்து சமீபத்தில் விலகினார்.
விமர்சனம்
பொங்கலூர் மணிகண்டன் அளித்த பேட்டியில், லோக்சபா தேர்தலில், 7 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது. திண்டுக்கல் தொகுதிக்கு பொறுப்பாளராக என்னை நியமித்தார்கள். அந்த தொகுதி மட்டுமில்லை, அனைத்து தொகுதிக்கும் நான் களப்பணிக்கு சென்றபோது, மக்கள் இந்த கூட்டணியை கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். மோசமாக பேசுகிறார்கள்.
குற்றச்சாட்டுகள்
அன்புமணிக்கு மட்டுமே ராமதாஸ் முன்னுரிமை கொடுக்கிறார். பிற வேட்பாளர்கள் தோற்றாலும் அவருக்கு கவலையில்லை. காடுவெட்டி குருவிற்கு மரியாதை இல்லை. இவ்வாறு அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் பொங்கலூர் மணிகண்டன்.
பாமக டூ அமமுக
இந்த நிலையில், இன்று புதுச்சேரியில், டிடிவி தினகரன் முன்னிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பொங்கலூர் மணிகண்டன் இணைந்து கொண்டார். பாமகவிலிருந்து விலகிய இரு முக்கிய நிர்வாகிகளும், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளது கவனிக்கத்தக்கது.
ஆபரேஷன் பாமக
தென் தமிழகம் குறிப்பாக மதுரை மண்டலத்தில் உள்ள தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தினகரன் கட்சி வலுவானதாக இருக்கிறது. வட மாவட்டங்களில் வேரூன்ற, பாமகவின் முக்கிய தலைவர்களை அமமுக குறி வைத்து தூக்குகிறது என்ற சந்தேகத்தை அரசியல் பார்வையாளர்கள் எழுப்புகிறார்கள்.