மாம்பழத்தை கீழே போட்ட மணிகண்டன் பரிசுப் பெட்டகத்துடன் ஐக்கியமானார்!
புதுச்சேரி: பாமகவை விட்டு விலகிய அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் மணிகண்டன் இன்று அமமுக கட்சியில் இணைந்தார்.
பாமகவின் மாநில துணை தலைவர் பதவியிலிருந்து நேற்று முன்தினம் விலகிய பொங்கலூர் மணிகண்டன் டிடிவி தினகரன் அணியில் இணைந்தார். புதுச்சேரியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த தினகரனைக் சந்தித்து கட்சியில் இணைந்தார்.
பாமக மாநிலத் துணைத் தலைவராக இருந்தவர் பொங்கலூர் மணிகண்டன். இவர் திடீரென கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்து தான் பாமகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கூறிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திடீரென கூட்டணி வைத்து கட்சியினரை ஏமாற்றி விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் மணிகண்டன் இன்று அமமுகவில் இணைந்து கொண்டார். இந்த நிலையில் புதுச்சேரியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தமிழ்மாறன் மற்றும் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் முருகசாமி ஆகியோரை ஆதரித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புதுச்சேரி பாக்கமுடையான்பட்டு பகுதியில் திறந்த வேனில் இருந்தபடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், புதுச்சேரியில் இரண்டு சாமிகள் சண்டை போட்டுக்கொண்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படைய செய்துள்ளார்கள் என்றும், மக்கள் சாமிகளை நம்பாமல் புதிய மாற்றத்திற்கான வழியை தேட வேண்டுமெனவும், தேசியக்கட்சிகளை ஆதரிக்காமல் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
மேலும் புதுச்சேரியில் காமெடி ஆட்சி நடந்துகொண்டிருப்பதாக விமர்சித்த டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளரை வெற்றிபெறச் செய்தால், கிழக்குக்கடற்கரை சாலை ரயில் திட்டம், புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும், புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என தினகரன் உறுதியளித்தார்.