சமஸ்கிருதத்துக்கு அதிக நிதியா? ஒரு கண்ணில் வெண்ணெய், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பா? வைரமுத்து
புதுச்சேரி: சமஸ்கிருதத்திற்கு நூற்றுகணக்கான கோடிகளை ஒதுக்கீடு செய்கின்ற மத்திய அரசு, வட மொழியைவிட மூத்த மொழியான தமிழுக்கு அதிகமான நிதியை ஒதுக்காமல், குறைந்த நிதியை ஒதுக்கியதற்கு தமிழ் அறிஞர்கள் வேதனைப்படுவதாக கவிஞர் வைரமுத்து வேதனை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த "உலகத் தமிழ் கவிதை ஓராயிரம்" என்ற நூல் வெளியீட்டு விழா கூட்டுறவு சங்க அரங்கத்தில் நடைபெற்றது. இதில் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டு, நூலினை வெளியிட சபாநாயகர் சிவக்கொழுந்து மற்றும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து, மிகப்பெரிய சாதனைகள் எல்லாம் சற்றே தாமதமாக நடைபெறும். கவிஞர்கள் எங்கு வேண்டுமானாலும் பிறக்கலாம், ஆனால் புதுச்சேரியில் இறக்க வேண்டும். அந்த அளவிற்கு புதுச்சேரி அரசு கவிஞர்களுக்கு மதிப்பளிக்கிறது.
பிறப்பு முதல் இறப்பு வரை கவிதையாக வாழக்கூடிய வரம் தமிழனுக்கு கிடைத்துள்ளது. கவிதை தமிழனைவிட்டு நகருவதில்லை. தமிழன் கவிதையைவிட்டு நகருவதில்லை. அனைத்து மதத்தினரும் ஒன்றே என்ற கவிதையை, மொழிபெயர்த்து அனுப்புபவர்களுக்கு அனுப்ப வேண்டும். படிக்க வேண்டியவர்கள் அதை படிக்க வேண்டும். நாட்டில் தபால்துறை காதலர்களாலும், கவிதை எழுதுவர்களாலும்தான் லாபத்தில் இயங்கி வருகிறது. காதலர்கள் இல்லையென்றால் தபால்துறை நஷ்டத்தில் இயங்கும். கைபேசி வாழ்வதே காதலர்களால்தான் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், உலகமயமாதல் என்ற பூதத்தால் இந்தியாவில் எந்த மொழிக்கும் ஆபத்து வரக்கூடாது என்பது நம் அனைவருடைய எண்ணம். அதிலும் தமிழ் மொழிக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பது என்னுடைய தனிப்பட்ட எண்ணம். தமிழ் மொழியை நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கவிஞர் வைரமுத்து, தமிழர்கள் தங்கள் தாய் மொழியை சிந்திக்கின்ற ஒரு பெருமிதத்தை பெற வேண்டுமென்று நான் கருதுகின்றேன். சமஸ்கிருதத்திற்கு கோடி கோடியாக, நூற்றுகணக்கான கோடிகளை ஒதுக்கீடு செய்கின்ற மத்திய அரசு, வட மொழியைவிட மூத்த மொழியான தமிழுக்கு அதிகமான நிதியை ஒதுக்காமல், குறைந்த நிதியை ஒதுக்கியதற்கு தமிழ் அறிஞர்கள் வேதனைப்படுகின்றனர். ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்ற கருத்து நிலையை மத்திய அரசு மாற்றி தமிழுக்கும் உரிய பெருமையை, உரிய இடத்தை வழங்க வேண்டுமென்பது தாய் மொழி தினத்தில் தமிழ் அறிஞர்களின் வேண்டுகோளாக வைக்கின்றேன் என்றார்.